பாப்புலாரிட்டியை பறி கொடுக்கும் அமமுக.. "பாப்புலர்" முத்தையா தலைமையில் நெல்லை கூடாரமே காலி!
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட அமமுக செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமையில் அக்கட்சியினர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் தினகரனின் அமமுக அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்த பின்னர் அமமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் மீண்டும் அதிமுகவுக்கு செல்லலாமா என்று யோசித்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லையில் அமமுக வேட்பாளர், மாவட்ட செயலாளர் உட்பட பல்வேறு நிர்வாகிகள் அதிமுகவில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அமமுகவில் யாரையும் கட்டிப் போட முடியாது என்று தினகரனும் அதிமுகவுக்கு செல்லலாமா வேண்டாமா என்று தினகரனின் முக்கிய தளபதியுமான தங்க தமிழ்ச்செல்வன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு மேலும் இங்கிருந்தால் பைசா பிரயோஜனம் இல்லை என்று மாநிலம் முழுவதும் பல்வேறு நிர்வாகிகள் கூறிவருகிறார்கள்.
கையில் இருந்த பணமும் பறிபோனதுடன் எம்.எல்.எ பதவியும் பறிபோனதால் செந்தில் பாலாஜி ஏற்கனவே திமுகவுக்கு சென்று இப்போது எம்.எல்.ஏவாகவும் தேர்வாகிவிட்டார். அதன் பின்னர் நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதி இடைதேர்தலில் அமமுக சற்று தேறும் நமக்கும் ஏதாவது நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த கட்சியினருக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. அதோடு தினகரனும் கட்சியினரை கிஞ்சித்தும் மதிப்பதில்லை என்ற குற்றசாட்டும் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நெல்லை மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் திரைப்படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் போட்டியிட்டார். இவர் தேமுதிகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர். இந்த தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டபோது கணிசமாக செலவு செய்துள்ளார். தேர்தலின் முடிவுகள் அமமுகவுக்கு படு பாதகமாக வந்துள்ள நிலையில் தற்போது கட்சி மாற முடிவு செய்து அதிமுகவுக்கு மாறிவிட்டார். இவரோடு நெல்லை , மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா உள்ளிட்டோர் அதிமுகவில் மீண்டும் இணைந்தனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுகவை ஒருசேரத் தோற்கடித்ததன் மூலம் பெரிதும் கவனிக்கப்பட்ட தினகரன் தமிழக அரசியலில் மாபெரும் சக்தியாக உருவெடுப்பார் என்று நமபப்பட்டது இதனால் அவர் தலைமையில் பெரும்பகுதியினர் இணைந்தனர். அவ்வாறு இணைந்தவர்களில் முக்கியமானவர் நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் பாப்புலர் முத்தையா. இவர் முதன்முதலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு கொடுத்தவர்.
இதேபோன்று முக்கியமான நபர்களில் ஒருவர் மைக்கேல் ராயப்பன். இதே போன்று பல்வேறு அதிமுகவினரும் தினகரனை நம்பினால் எதிர்காலம் உண்டு என்று நம்பினர். ஆனால் தேர்தலின்போது அவருக்குச் சின்னம் கொடுப்பதிலிருந்து பல இடையூறுகள் ஏற்பட்டன. இதனால் அமமுகவுக்குள் சலசலப்பு உருவானது.
இந்நிலையில் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரும் நெல்லை வடக்கு மாவட்டச் செயலாளருமான பாப்புலர் முத்தையா, நெல்லை மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் இன்று அமமுகவிலிருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் அமமுகவை விட்டு வெளியேறுவார்கள் என்று கூறப்படுகிறது.