அப்பாடா, புதுச்சேரி வந்துட்டோம்.. காசி புனித யாத்திரை சென்ற 22 பேர் 45 நாட்களுக்கு பிறகு திரும்பினர்
புதுச்சேரி: உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசிக்கு புனிதயாத்திரை சென்று சிக்கிய 22 பேர் 45 நாட்களுக்கு பிறகு புதுச்சேரி அழைத்துவரப்பட்டனர். அவர்கள் தங்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட சத்தியா நகரை சேர்ந்த 22 பேர் வாரணாசிக்கு புனிதயாத்திரையாக கடந்த மார்ச் 19 ஆம் தேதி புதுச்சேரியில் இருந்து ரயில் மூலம் புறப்பட்டுச் சென்றனர். மீண்டும் புதுக்சேரிக்கு திரும்ப 29 ம் தேதி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.
அவர்கள் மார்ச் 21 ம் தேதி உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு அதிகாலை சென்ற நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டன. மேலும், விமானம், ரயில் உள்ளிட்ட சேவைகளும் ரத்து செய்யப்பட்டு விட்டது. கோயில்களும் மூடப்பட்டன. பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.
இதனால், வாரணாசி கவுடியா மடத்தில் தங்கியிருந்த அவர்கள் புதுச்சேரிக்கு திரும்ப கோரிக்கை விடுத்தனர். இதையறிந்த புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு புதுச்சேரிவாசிகளை ஊருக்கு அனுப்ப கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.
மேலும், புதுச்சேரி வாசிகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் பணம் அனுப்பி வைத்தார். இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசு வெளிமாநிலத்தில் சிக்கியவர்கள் வீடு திரும்பலாம் என அறிவித்தது. இதையடுத்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண், வாரணாசி ஆட்சியரான கவுசல் ராஜ் சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் பலனாக 45 நாட்களாக வாரணாசியில் சிக்கியிருந்த 22 பேரும் ஒரு பேருந்தில் கடந்த 2 ம் தேதி புதுச்சேரி புறப்பட்டனர். அவர்கள் இன்று புதுச்சேரி அழைத்துவரப்பட்டனர். கோரிமேடு எல்லைப் பகுதிக்கு வந்த அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், வருவாய்த்துறையினர் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.
நாடு இப்போது இருக்கும் சூழலில்... நீட் தேர்வை நடத்தக்கூடாது... மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அருண் கூறுகையில், வேறு மாநிலத்தில் சிக்கித்தவிக்கும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வரவும், புதுச்சேரிக்கு வந்து சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் தவிப்பவர்களை அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன்படி, வாரணாசியில் புதுச்சேரியை சேர்ந்த 22 பேர் பேருந்தில் அழைத்து வர புதுச்சேரி முதல்வர், உத்தரபிரதேச முதல்வருடன் பேசி, அங்குள்ள ஆட்சியர் மூலம் இன்று அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் 14 நாட்கள் வீடுகளிலேயே கண்காணிப்பில் இருப்பார்கள் என்றார்.