புதுவையில் மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா - பாதிப்பு 21 ஆக அதிகரிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரது மனைவி, மகள் மற்றும் அவரது நண்பர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகரைச் சேர்ந்த 36 வயதுடைய நபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு புதுச்சேரி அரசின் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவர் வசித்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, அவரது குடும்ப உறுப்பினர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவருடன் தொழிற்சாலையில் பணிபுரிந்த சக ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருடைய 32 வயதுடைய மனைவி, 9 வயது மகள் மற்றும் நெட்டப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அவருடைய நண்பர் என 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறாத நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்ட அந்த நபருக்கு எங்கிருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவியது என சுகாதாரத்துறை விசாரணை நடத்தியதில், அந்த நபர் தொழிற்சாலையில் பணி நேரம் போக, மீதமுள்ள நேரத்தில் வீட்டின் அருகே காய்கறிகளை விற்று வந்துள்ளார்.
இதற்காக அவர் அவ்வப்போது கோயம்பேடு காய்கறி சந்தைகுக்கு சென்று வந்ததும், கோயம்பேடு சந்தை மூலமே அந்த நபருக்கு கொரோனா வைரஸ் பரவியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொரோனா: சிங்கப்பூரில் ஒரே நாளில் 1,164 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரைக்கும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 9 பேர் ஏற்கனவே சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். மேலும் தற்போது புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 7 பேரும் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 12 பேர் ஜிப்மர் மற்றும் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.