பந்தயம் கட்டி சக மாணவியை சீரழித்த மாணவர்கள்.. 4 பேரும் போக்சோவில் கைது!
புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் 13 வயது மாணவியை சக மாணவர்கள், நான்கு பேர் வகுப்பறையில் வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் மாணவர்கள் 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே கொண்டே போகிறது. பாலியல் குற்றங்களை தடுக்க அரசு கடுமையான சட்டங்களை கொண்டுவந்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. மாறாக தற்போது சிறிய பெண் குழந்தைகளை கூட காமக்கொடூரர்கள் விட்டு வைப்பதில்லை. இந்த நிலைதான் தற்போது நாட்டில் உள்ளது.
மேலும் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை அறிவித்தும், தண்டனை நிறைவேற்ற முடியாமல் நாட்கள் தள்ளிக்கொண்டே போகிறது. இதனால் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அச்சமின்றி பாலியல் குற்றச் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
தற்போது புதுச்சேரியில் பள்ளியிலேயே மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி நகரப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் 13 வயது மாணவி ஒருவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடன் பயிலும் சக மாணவர் ஒருவர் தனது நண்பர்களிடத்தில் பந்தயம் கட்டி வகுப்பறையிலேயே மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி மிரட்டியுள்ளார். இதனால் மாணவி மிகுந்த அதிர்ச்சியடைந்தார்.
அதோடு நின்றுவிடாமல், மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது குறித்து அந்த மாணவன், சக மாணவர்களிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மேலும் 3 மாணவர்கள் அந்த மாணவியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட அந்த மாணவி, பள்ளியில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவுக்கு புகார் அளித்தனர். அக்குழுவினர் விசாரணை நடத்தியதில், மாணவர்கள் நான்கு பேரும், மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி பெரியகடை காவல் நிலையத்திற்கு குழந்தைகள் நல குழுவினர் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 4 மாணவர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அரியாங்குப்பம் பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். பந்தயம் கட்டி சக மாணவியை, மாணவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.