குப்பையில் பேப்பர் சேகரித்த பெண்ணுக்கு கொரோனா.. புதுச்சேரியில் வேகமெடுக்கும் பாதிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையோர குப்பைகளில் பிளாஸ்டிக் பேப்பர்களை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடக்கம் முதல் ஒற்றை இலக்கத்திலேயே இருந்து வந்தது. தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 4 ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் புதுச்சேரி அரசு பல்வேறு தளர்வுகளை அளித்ததால், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் புதுவைக்கு திரும்பி வருவதால், பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக மக்களிடையே அச்சம் காணப்படுகிறது. தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆட்சியாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி புதுச்சேரியில் மொத்தம் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் 12 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், மீதமுள்ள 27 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இன்று மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரியகாலாப்பட்டு மற்றும் மண்ணாடிப்பட்டை சேர்ந்த 2 இளைஞர்கள், ரெட்டியார்பாளைரம் மூகாம்பிகை நகரை சேர்ந்த ஒருவர், குருமாம்பேட் பகுதியில் குப்பைகளில் பிளாஸ்டிக் பேப்பர்களை சேகரிக்கும் பெண் மற்றும் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய வந்த நபர் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த சில தினங்களாக புதுச்சேரியில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதால், புதுச்சேரியில் கொரோனா சமூக தொற்றாக மாறியுள்ளதா? என சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தற்போது எல்லைப் பகுதிகளில் தளர்வுகள் கடைபிடிக்கப்படாததால் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக புதுச்சேரிக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது. எனவே கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் இ-பாஸ் இல்லாமல் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
100+ டென்ட்கள்.. தயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா.. பெரும் பதற்றம்!