இரண்டு பேருந்துகளில் கேரளாவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட 50 புதுவை பல்கலை. மாணவர்கள்..
புதுச்சேரி: கொரோனா ஊரடங்கால் புதுவை மத்திய பல்கலைகழகத்தில் சிக்கிதவித்து வந்த 50 பல்கலைகழக மாணவர்களை, அவர்களது சொந்த ஊரான கேரள மாநிலத்திற்கு இரண்டு பேருந்துகளில் முதலமைச்சர் நாராயணசாமி அனுப்பி வைத்தார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் குறையாததால் 4 வது கட்டமாக ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் வேலை, கல்வி, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அதிகளவில் தவித்து வருகின்றனர்.
நிர்மலா சீதாராமனின் அடுத்தடுத்த அறிவிப்புகள்- ஏழைகளுக்கு எதுவுமே இல்லை- நாராயணசாமி அட்டாக்
இதற்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்துக்கு செல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. புதுச்சேரி அரசும் தனியாக http://welcomeback.py.gov.in இணையதளம் தொடங்கி அவர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
மேலும் கல்வி, வேலை, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சென்று கொரோனா ஊரடங்கால் சிக்கி தவித்து வந்த புதுச்சேரியை சேர்ந்த 107 பேரை மாநில அரசு புதுச்சேரிக்கு கொண்டுவந்துள்ளது. அதேபோல் புதுச்சேரியில் இருந்த 424 பேர் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 14 ஆம் தேதி முதல் 2,448 பேர் புதுச்சேரியில் இருந்து வெளியே செல்வதற்கும், 1,080 பேர் புதுச்சேரிக்குள் வருவதற்கும், அவசர தேவைக்காக 2,034 பேர் என மொத்தம் 5,562 பேருக்கு இதுவரை ஆன்லைன் மூலம் இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைகழகத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் கேரள மாநிலத்தை சேர்ந்த 50 மாணவர்கள் தங்களது ஊருக்கு செல்ல உதவுமாறு முதலமைச்சர் நாராயணசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து நேற்று மாணவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, இரவு புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு பேருந்துகளில் முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் 50 மாணவர்களும் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம், மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.