புதுச்சேரி: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்- 9 நாட்களுக்கு பின் சடலமாக ஒதுங்கிய சோகம்
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்டோவை காப்பாற்ற முயன்றபோது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் 9 நாட்களுக்கு பிறகு சடலமாக கரை ஒதுங்கிய சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
9 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் ரெட்டியார்பாளையம் வாய்க்காலில் கரை ஒதுங்கிய ஆட்டோ ஓட்டுனரின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நவம்பர் 20ம் தேதி பெய்த கனமழையின்போது நகரத்திற்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது வெள்ளத்தில் இருந்து ஆட்டோவை மீட்க முயற்சித்தபோது அடித்து செல்லப்பட்டார் ஓட்டுநர்.
கண்ணீர் விடும் பிரதமர்கள்: கடன் கொடுத்து நாட்டையே அடித்து பிடுங்கும் சீனா- தவிக்கும் குட்டி தேசங்கள்
வடகிழக்கு பருவமழை
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இரண்டு முறை உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இதுவரை 100 செ.மீ.க்கு மேல் மழை பெய்துள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. அன்று மாலை 2 மணிநேரத்தில் 8 செ.மீ. மழை பொழிந்ததால் அப்பகுதியே வெள்ளக் காடாக காட்சியளித்தது. புதுச்சேரி நகரத்தின் பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியது. இதற்கிடையே மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வெள்ளவாரி வாய்க்காலிலும் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.
நகரத்திற்குள் ஆறு போல் வெள்ளம்
இந்நிலையில் சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தில் புகுந்த வெள்ளம் அங்கிருந்த வாகனங்களை அடித்துச் சென்றது. அப்போது அங்கிருந்த ஆட்டோவும் தண்ணீரில் அடித்துச்சென்றது. இதை பார்த்த ஆட்டோவின் உரிமையாளரான முதியவர் கனகராஜ் ஆட்டோவை காப்பாற்ற முயற்சித்தார். ஏற்கனவே இடுப்பளவில் தண்ணீர் இருந்ததை பொருட்படுத்தாமல் ஆட்டோ மீட்க முயன்றார். ஆனால் தண்ணீரின் வேகம் காரணமாக நிலைமையை கனகராஜ் சமாளிக்க முடியவில்லை. ஆட்டோ தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது கனகராஜும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு அருகில் இருந்த வெள்ளவாரி வாய்க்கால் நீரில் மூழ்கினார்.
காணாமல் போன கனகராஜ்
இதையடுத்து உறவினர்கள், பொதுமக்கள் அவரைத் தேடினர். கட்டுக்கடங்காமல் வெள்ளம் சென்றதால் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் கனகராஜை தேடினர். வெள்ளவாரி வாய்க்கால் தண்ணீர் கனகன் ஏரிக்கு சென்றடையும் என்பதால் அங்கும் தீயணைப்புத்துறையினர் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் அவரை தேடும் முயற்சி கைவிடப்பட்டது.
சடலம் வாய்க்காலில் ஒதுங்கியது
பின்னர் மழை குறைந்த பிறகு 9 நாட்கள் ஆகியும் கனகராஜ் குறித்த தகவல்கள் ஏதும் உறவினர்களுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் ரெட்டியார்பாளையம் வாய்க்காலில் ஒரு ஆண் முதியவரின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி விசாரித்ததில் அவர் கடந்த 9 நாட்களுக்கு முன் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் கனகராஜ் என்பது தெரியவந்தது. இதை அடுத்து உறவினர்களுக்கு தகவல் தரப்பட்டு அடையாளம் காணப்பட்டது. பின்னர் அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.