காது கேளாதோருக்காக சிறப்பு முகக்கவசம்.. திருச்சி மருத்துவர் வடிவமைப்பு
புதுச்சேரி: காது கேளாதோர் குறிப்பு மொழி உணர்ந்து தொடர்பு கொள்ள சிறப்பு முக கவசம் உருவாக்கியுள்ள திருச்சி மருத்துவர், புதுச்சேரி முதல்வரிடம் 500 முகக் கவசங்களை இலவசமாக வழங்கினார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும் இந்த வைரசில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஒருசில மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள் பலரும் முக கவசம் அணிந்து பணிகளை தொடங்கி விட்டனர். அதே நேரத்தில் காது கேளாதோர் பற்றி சிந்திக்க வேண்டும். காது கேளாதோர் குறிப்பு மொழி மூலமும் நாம் உச்சரிக்கும் உதடுகளை கவனிப்பதன் மூலமும் உற்று கவனித்து அர்த்தத்தை புரிந்து கொண்டு தகவல் பரிமாற்றம் செய்வது வழக்கம்.
சாதாரண முககவசம் அவர்களுக்கு பலன் தராது. காது கேட்காத நபர் நாம் சொல்வதை நமது உதடுகள் உச்சரிப்பை பார்க்கும் வகையில் முககவசம் தேவை. அதை உருவாக்கிய மருத்துவர் முகமது ஹக்கீம், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம் 500 முக கவசங்களை இலவசமாக தந்தார்.
காது கேளாத நபர்களுக்கு உதவ சிறப்பு முக கவசம் உருவாக்கம் தொடர்பாக திருச்சி துவரங்குறிச்சி யை சேர்ந்த அவசர நிலை மருத்துவரான முகமது ஹக்கீம் கூறுகையில், காது கேளாத நபர்கள் மற்றவர்கள் பேசுவதை உதடு அசைவு மூலம் உன்னிப்பாக கவனித்து அவர்கள் பேசுவதை புரிந்து கொள்வார்கள். முககவசம் உதடு, மூக்கு மூடும் வகையில் இருக்கும். இது காதுகேளாதோர் தகவல் பரிமாற்றத்துக்கு தடையாக இருந்தது.
பாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனா உறுதி? தனிமைப்படுத்தப்பட்ட 35 பேர்?
வாய் பகுதி தெரிந்தால் காது கேளாதோர் உதடு அசைவை பார்த்து குறிப்பு மொழியை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதனால் அவர்களுக்கான முககவசம் செய்துள்ளேன். காதுகளில் மாட்டிக்கொள்ளக்கூடிய சுருங்கி நீளும் எலாஸ்டிக் கயிறு பயன்படுத்த எளிதான பொருட்களால் தயாரிக்கப்பட்டது இந்த கவசம். மூக்குபிடிப்பு பகுதியின் வடிவமைப்பு அணிபவரின் வசதிக்கு ஏற்றவாறு சரி செய்யலாம், ரப்பர் பொருளால் தயாரிக்கப்படாமல் சுற்று சூழலுக்கு உகந்த ஒளி ஊடுருவும் தாளால் தயார் செய்யப்பட்டது. இதனால் வாய் அசைவை பார்க்க முடியும்.
தமிழகத்தில் இம்முறையை தெரிவித்து அரசு ரூ. 15 ல் வடிவமைத்து 81 ஆயிரம் பேருக்கு தந்துள்ளது. தமிழகத்தை தொடர்ந்து தற்போது புதுச்சேரிக்கு 500 முக கவசங்களை முதல்வரிடம் தந்துள்ளேன். இதேமுறையில் அனைவருக்கும் தருவது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளேன். அடுத்தவாரம் கேரளத்துக்கு சென்று அரசு தரப்பை சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது.
என் 95 தர நிலை முக கவசம் தரும் பாதுகாப்பை இப்புதிய கவசமும் தரும். அதாவது 95 சதவீதம் பாக்டீரியா , நுண்துகள் பொருட்களை வடிக்கட்டும் திறன் இந்த முக கவசங்களுக்கு உண்டு. புதியவகை முககவசத்தை தருவதின் அவசியத்தை அரசு தரப்புக்கு தெரிவித்து வருகிறேன் என்று குறிப்பிட்டார். காது கேளாத மாணவர்கள் முதல்வர் அறையில் புது முககவசம் அணிந்து பார்த்து மகிழ்ந்தனர்.