புதுச்சேரிக்கும் வந்தது நிபா: அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் அனுமதி.. மக்கள் பீதி
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிபா வைரஸ் அறிகுறியுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிபா வைரஸ் கேரள மக்களை மிரட்டி வருகிறது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் கல்லூரி மாணவர் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து தனி வார்டு அமைக்கப்பட்டு நிபா கண்காணிப்பு பணிகளும் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அணில் மற்றும் வவ்வால் கடித்த பழங்களை மக்கள் உண்ணக்கூடாது என அம்மாநில அரசு கோரிக்கை விடுத்தது.
கொடுமையான நிபா
நிபா வைரஸ் மரணத்தை ஏற்படுத்தும் கொடுமையான வைரஸ் என்பதால் மத்திய அரசின் 6 பேர் கொண்ட குழு உடனடியாக கேரளாவுக்கு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டது.
காய்ச்சல் இருந்தால்
தற்போது அங்கு பருவமழை தொடங்கிவிட்டதால் நிபா வைரஸ் எளிதில் பரவிவிடும் என்பதால காய்ச்சல் ஏற்பட்டால் மக்கள் உடனடியாக மருத்துவமனையை அனுக வேண்டும் என அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
புதுச்சேரியில் நிபா
தமிழகத்திற்குள் நிபா வைரஸ் பரவாதபடி கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் புதுச்சேரியில் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிபா அறிகுறிகள்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அந்த நபர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.
ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து அவரை பரிசோதித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதுச்சேரியில் நிபா வைரஸ் அறிகுறியுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.