புதுவை - கடலூர் என்.எச்-ல் தாறுமாறாக ஓடிய தனியார் பஸ்.. விபத்தில் சிக்கி 5 பேர் படுகாயம்
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து ரோட்டில் சென்ற பிற வாகனங்கள் மீது விபத்து ஏற்படுத்தியதில் ஐவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
புதுச்சேரி - கடலூர் தேசிய சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துகொண்டே செல்கிறது. புதுச்சேரி அரசு சாலையை விரிவாக்கம் செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.
இதேபோல் பேருந்து ஓட்டுனர்களும் இந்த சாலையில் அதி வேகத்துடன் பேருந்தை இயக்கி வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் அலட்சியத்தால் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த 2 கார், ஒரு வேன், 4 டூ வீலர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
48 மணிநேர மராத்தான் உறவு.. செப்டிக் ஆகி உயிரிழந்த மனைவி.. சிறை செல்லாமல் தப்பிய கணவர்!
விபத்தை ஏற்படுத்திய பேருந்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள், ஓட்டுநரையும் சராமாரியாக தாக்கினர். மேலும் பேருந்து வாகனங்கள் மீது மோது சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
புதுச்சேரியிலிருந்து பாகூர் நோக்கி அதிவேகத்துடன் சென்ற தனியார் பேருந்து ஒன்று முதலியார்பேட்டை பகுதியில், முன்னாள் சென்ற ஒரு வேன் மற்றும் இரண்டு கார்கள் மீது விபத்துகுள்ளாகிவிட்டு தாறுமாறாக ஓடியது. இதனால் சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு சாலையின் நாலாபுறமும் தெறித்து ஓடினர்.
ஒருகட்டத்தில் 4 இருசக்கர வாகனங்கள் மீது மோதிய பேருந்து மேற்கொண்டு நகர முடியாமல் சாலையின் நடுவே நின்றது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் உட்பட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளது. இதனிடையே விபத்து ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநரை பிடித்து சராமாரியாக தாக்கிய அப்பகுதி மக்கள், பேருந்தின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முதலியார்பேட்டை போலீசார் பொதுமக்களிடமிருந்து பேருந்து ஓட்டுநரை மீட்டு, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண் இமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.