புதுச்சேரியில் சிரசாசனம் யோகா.. 10 வயது சிறுமி தந்தையுடன் கொரோனா விழிப்புணர்வு!
புதுச்சேரி: புதுச்சேரியில் சிரசாசனம் யோகா வாயிலாக தலைகீழாக நின்று 10 வயது சிறுமி தந்தையுடன் கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டார்.
புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் யோகா ஆசிரியராகவும் இருந்து வருகிறார். இவரது 10 வயது மகள் சஸ்மிதா. அங்குள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதுபோல் இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கொரோனாவால் 3 பேர் பாதிக்கபட்டுள்ள நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
உத்தரவுகளை கடைபிடிக்காத மக்கள்.. மனசு உறுத்தலா இருக்கு.. நாராயணசாமி வேதனை!
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகளவில் பரவி வருவதால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராஜசேகரும் அவரது மகள் சஸ்மிதாவும் சிரசாசனம் மூலம் தலைகீழாக நின்று தட்சிணாமூர்த்தி ஸ்லோகம், கணபதி ஸ்லோகம், அம்மன் ஸ்லோகம், குரு ஸ்லோகங்களை 3 நிமிடம் சொல்லியும், பல்வேறு யோகாசனங்களை செய்தும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் உலக மக்கள் கொரோனா நோயில் இருந்து விடுபட பிரார்த்தனையும் மேற்கொண்டனர். அவர்களுடைய இந்த விழிப்புணர்வை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்.
இது குறித்து யோகா ஆசிரியர் ராஜசேகர் கூறுகையில், கொரோனாவில் இருந்த தப்பிக்க அனைவரும் யோகா செய்வது சிறந்தது. குறிப்பாக ஆசனங்களின் அரசன் என்று பெயர்பெற்றது சிரசாசனம். இதனை தலைகீழாக நின்று செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், எதிர்ப்பு சக்தியும் கூடம். எனவே பொதுமக்களுக்கு இந்த சிரசாசனம் யோகாவை செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். மேலும் கொரோனாவில் இருந்து உலக மக்கள் அனைவரும் விடுபட ஸ்லோகங்களை சொல்லி பிரார்த்தனை செய்தோம் என தெரிவித்தார்.