காபியில் மயக்க மருந்து..இளம் பெண் பலாத்காரம்.. தீக்குளித்து மரணம்..பரபரப்பு வாக்குமூலம்.. புதுவையில்
புதுச்சேரி: காபியில் மயக்க மருந்து கலந்துகொடுத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஸ்டூடியோ உரிமையாளரால் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரியாங்குப்பம் சுப்பையாநகர், பாரதி வீதியை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. இவரது மகள் தனலட்சுமி (31) திருமணமாகவில்லை. பன்னிரண்டாம் வகுப்பு முடித்த இவர் காந்தி வீதியில் வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மதுரை என்பவர் நடத்தி வரும் போட்டோ ஸ்டூடியோவில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார்.
மதுரைக்கு திருமணம் ஆகி 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தனலட்சுமிக்கு காபி கொடுக்கும்போது மதுரை அதில் மயக்க மருந்தை கலந்துகொடுத்துள்ளார். இதில் மயங்கிய தனலட்சுமியை அவர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்து எழுந்த தனலட்சுமி தனக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி அழுதுள்ளார். அப்போது மதுரை தனலட்சுமியை திருமணம் செய்துக்கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
இதனிடையே கடந்த 3 மாதத்திற்கு முன்னர் தனலட்சுமி வேலையை விட்டு நின்றுள்ளார். வீட்டில் தனலட்சுமிக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால் ஒருவரால் கற்பழிக்கப்பட்ட தான் இன்னொரு மாப்பிள்ளையை திருமணம் செய்துக்கொள்ள தனலட்சுமி விரும்பவில்லை. இதனிடையே மதுரையும் தனலட்சுமிக்கு போன் செய்து தொல்லைகொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவிரக்தியடைந்த தனலட்சுமி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக நீதிபதியிடம் அவர் அளித்த மரண வாக்குமூலத்தில், மதுரை தன்னை கற்பழித்ததாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் மதுரை மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடிவருகின்றனர்.