மொத்தம் 200 இடங்கள், தேர்வெழுதியது 1.84 லட்சம் பேர்.. நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஜிப்மர்
புதுச்சேரி: புதுவையில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வு முடிவுகள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இயங்கிவரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூன் 2-ம் தேதி நடைபெற்றது. இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஜிப்மர் மருத்துவ கல்லூரியும் ஒன்று. தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்நிறுவனம், மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்குகிறது. இது கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையையும் கொண்டுள்ளது.
பல்வேறு மருத்துவப்படிப்புகளை இந்நிறுவனம் வழங்குவதால், இந்திய மாணவர்கள் மட்டுமின்றி அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்த கல்லூரியில் மருத்துவம் பயில வருகின்றனர். இந்நிலையில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்வதற்கான தேர்வு நாடு முழுவதும் உள்ள 25 மாநிலங்களில் ஜூன் 2-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெற்றது.
இதற்காக அமைக்கப்பட்ட 280 மையங்களில், சுமார் 1 லட்சத்து 84 ஆயிரத்து 272 மாணவர்கள் ஆன்லைன் மூலம் இந்த தேர்வினை எழுதினர். ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் உள்ள 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கும், ஜிப்மர் காரைக்கால் கிளையில் உள்ள 50 இடங்களுக்கும் என, மொத்தம் 200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு இந்த தேர்வு நடந்தது.
புதுச்சேரியில் மட்டும் 7 மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 2,279 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். காலை மற்றும் மாலை என இரு வேளையாக பிரித்து இந்த தேர்வு நடத்தப்பட்டது. காலையில் நடைபெற்ற ஜிப்மர் மருத்துவ படிப்புக்கான தேர்வை 94 073 பேர், மாலையில் 90 199 பேர் என இரு வேளையில் தேர்வுகளை எழுதினர். அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மொத்தம் 200 மருத்துவ இடங்கள் மட்டுமே கொண்ட ஜிப்மரில் சேர, 280 மையங்களில் 1,84,272 மாணவர்கள் ஆன்லைன் மூலம் நுழைவுத்தேர்வு எழுதியிருந்தனர்.
இந்நிலையில் 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டிற்கான 200 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு நடைபெற்ற நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜிப்மர் கல்லூரியில் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஜூலை முதல் வாரம் முதல் வகுப்புகள் துவங்கும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.