புதுச்சேரி.. ரங்கசாமி இருந்தால் ஆட்சி.. இல்லைன்னா பாஜக போச்சி.. ஏபிபி சர்வே சொல்வது இதைத்தான்
புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக ஏபிபி சி வோட்டர் சர்வே தெரிவிக்கிறது.
புதுச்சேரியில் எந்த ஒரு அடித்தளமும் இல்லாத கட்சி பாஜக.. அந்த கட்சிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ ஒருவர் கூட கிடையாது.. அப்படி இருந்தும் திடீரென எப்படி 17 முதல் 21 இடங்களை வெல்லும் என்று சி வோட்டர் சர்வே தெரிவிக்கிறது?
ஏபிபி சி வோட்டர் சர்வே பொதுவாக சரியாக கணிக்க கூடிய ஒரு அமைப்பு. கடந்த பல தேர்தல்களில் அவ்வாறு நடந்துள்ளது. ஆனால் பாஜக கூட்டணி என்று அவர்கள் கருத்துக் கணிப்பு முடிவை வெளியிட்டதால் தான் மக்களிடையே குழப்பம் நிலவுகிறது.
பாஜக பெரிய கட்சி என்பதால் அவ்வாறு சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது சி வோட்டர். என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இணைந்து தேர்தலை சந்திப்பதாக திட்டம் இருக்கிறது.
என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு புதுச்சேரியில் பெரும் செல்வாக்கு இருக்கிறது. புதுச்சேரியில் ஐந்து வருடங்கள் முதல்வர் பதவியை வகித்தவர் என்ற பெருமைக்கு உரியவர் ரங்கசாமிதான்.
நாராயணசாமிக்கு அடுத்தபடியாக ரங்கசாமி ஆட்சி வரும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதே சர்வே புதுச்சேரியில் யார் உங்கள் விருப்பமான முதல்வர் வேட்பாளர் என்று கேட்டதற்கு ரங்கசாமிக்குதான் 45.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் இடையே இன்னும் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. ஆனால் இதைத்தான் பாஜக கூட்டணி என்று குறிப்பிட்டு சர்வே வெளியிட்டுள்ளது.
ரங்கசாமி அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். அவரது செல்வாக்கை நம்பி ரங்கசாமியை பாஜக கழற்றி விட்டு விடலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் ரங்கசாமி எளிதாக வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. அல்லது நாராயணசாமியே வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது. இந்த கருத்துக் கணிப்பு அதைத்தான் பிரதிபலிக்கிறது.