ஆஹா.. என்ன இது.. புதுஸ்ஸா இருக்கே.. நடுக்கடலில் சிம்பு பேனருக்கு பாலாபிஷேகம்! #புதுச்சேரி
Recommended Video
புதுச்சேரி: நடிகர் சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் புதுச்சேரியில் படு வித்தியாசமாக பாலாபிஷேகம் செய்து மிரள வைத்துள்ளனர்.
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனிடையே பொங்கல் பண்டிகையின்போது நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், தன்னுடைய வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் கட்அவுட்டுகளை வைத்து பாலபிஷேகம் செய்வதை தவிர்த்து, தங்களுடைய தாய்க்கு புடவையும், தந்தைக்கு வேட்டி சட்டையும், உடன்பிறந்தவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த சிலர், ரசிகர்களே இல்லாத சிம்புவிற்கு எதற்கு இந்த வீன் விளம்பரம் என சமூகவலைளங்களில் சிம்புவைப்பற்றி கிண்டல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிம்பு மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு கட்அவட் மற்றும் பேனர்கள் வைத்து, அண்டா அண்டாவாக பாலபிஷேகம் செய்து தன்னுடைய பலத்தை நிருபியுங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் சிம்பு.
இதையடுத்து அண்டாவும், பாலுமாக ரசிகர்கள் களம் இறங்கி விட்டனர். இன்னும் ஒரு சில தினங்களில் படம் திரைக்கு வரவுள்ள நிலையில், புதுச்சேரி மாநில சிம்பு தலைமை ரசிகர் மன்றத்தினர், புதுச்சேரி காந்தி சிலை பின்புறம் உள்ள கடலுக்குள் படகு மூலம் சென்று, நடுக் கடலில் சிம்பு பட பேனரைக் கட்டி, வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெற்றி பெறவும், சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தும் பாலாபிஷேகம் செய்துள்ளனர்.
தமிழக ரசிகர்கள் தரையில் பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்தால், புதுச்சேரிக்காரர்கள் வேற லெவலில் சிந்தித்திருப்பது சிந்தனையைத் கிண்டிக் கிளறி (!!!) விடுவதாக உள்ளது!