முதலமைச்சர் நாராயணசாமியே பதவி விலகுங்கள்... இல்லாட்டி மெஜாரிட்டியை நிரூபியுங்க.. அதிமுக!
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மீதும், முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ புகார் கூறிய விவகாரம். முதல்வர் நாராயணசாமி பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க அதிமுக வலியுறுத்தியுள்ளது.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த, அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன், ஆளுங்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனவேலு ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இது அவர்களின் உட்கட்சி விவகாரம் என்றாலும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது பகிரங்கமாக ஆளுநரை சந்தித்து ஊழல் புகார் கூறியுள்ள சம்பவம் இந்த ஆட்சியின் அவலப்போக்கை காட்டுவதாக உள்ளது.
பகிரங்கமாக முதலமைச்சர் மீது ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு கூறிய ஊழல் புகாரை தொடர்ந்து முதலமைச்சர் தானாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் பேரவையை கூட்டி தனது ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ தனவேலு பல்வேறு பரபரப்பு புகார்களை கூறி வரும் நிலையில், அரசுக்கு எதிராக எதிர்கட்சிகளும் களமிறங்கத் தொடங்கியுள்ளது ஆளும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனை முதல்வர் நாராயணசாமி எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
இதனிடையே புதுச்சேரி மாநில அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ தனவேலுவை, கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் இன்று காலை அறிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தனவேலு எம்எல்ஏ, காங்கிரஸ் கட்சிக்கு நான் விரோதி கிடையாது. ஊழல் வேண்டாம் என்று தான் சொல்லுகிறேன். நான் கண்டிப்பாக ஊழல்களை வெளியே கொண்டு வருவேன். புதுச்சேரி மாநில முதல்வருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. பல துறைகள் மூட அமைச்சர்களே காரணம். என்னை நீக்க புதுச்சேரி மாநிலத்திற்கு அதிகாரமில்லை. மேலிடம்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், நான் காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். மாநில காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு செயல்படுகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம், முதல்வர் நாராயணசாமி தலைமையில் இரு கோஷ்டிகள் செயல்படுகிறது என்றார்.
முதலமைச்சர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை, சபாநாயகரிடம் கொடுப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, சபாநாயகரும் ஊழல் பட்டியலில் இருக்கிறார். சமயம் வரும் போது அதை வெளியிடுவேன் என தெரிவித்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தனவேலு.