புதுச்சேரி முதல்வர் முன்பு அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்
புதுச்சேரி: புதுச்சேரி மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசிக்கான பணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் ஏழை எளிய மக்களுக்கு மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 23 மாதங்களாக மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசியினை வழங்கவில்லை.
மேலும் இலவச அரிசிக்கு உண்டான பணத்தையும் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தாமல் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறது என கூறியும், புதுச்சேரியில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பண்டிகைகால நிதியினை வழங்க வலியுறுத்தியும், அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அசானா, வையாபுரி மணிகண்டன், பாஸ்கள் ஆகியோர் சட்டபேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலக அறை வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தினை தொடர்ந்து சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படாததால் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனையடுத்து முதல்வர் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொலைபேசியில் நடத்திய பேச்சுவார்த்தையினை தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கலைந்து சென்றனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் போராட்டம் காரணமாக சட்டப்பேரவை வளாகத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.