புதுச்சேரியில் '3+2'.. ஒர்க் அவுட் ஆகுமா பாஜகவுடன் கூட்டணி ஆட்சி.. நாளை அமைச்சர்கள் பதவியேற்பு?
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அமைச்சரவை பட்டியலை இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் வழங்கியுள்ள நிலையில், அமைச்சர்கள் நாளை பதவியேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரிக்கும் ஒரே கட்டமாகக் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. புதுச்சேரி சட்டசபையில் நியமன உறுப்பினர்கள் இருவர் உட்பட மொத்தம் 32 உறுப்பினர்களாகும்
இந்தத் தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. அதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அரசை விளாசிய எடப்பாடி.. மடக்கிய துரைமுருகன்.. சப்போர்டுக்கு வந்த மா.சு! சட்டசபையில் காரசார விவாதம்
கூட்டணி ஆட்சி
16 இடங்களில் போட்டியிட்ட என் ஆர் காங்கிரஸ் 10 இடங்களில் வென்றது. அதேபோல என் ஆர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக ஆறு இடங்களில் வென்றது. இதுதவிர திமுக 6 இடங்களிலும், சுயேச்சைகள் 6 இடங்களிலும் காங்கிரஸ் 2 இரண்டு இடங்களிலும் வென்றன. எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்காததால் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க என் ஆர் காங்கிரஸ் உரிமை கோரியது.
தாமதம்
அதைத் தொடர்ந்து கடந்த மே 7ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் எந்த அமைச்சர்களும் பதவியேற்கவில்லை. விரைவில் அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்குள் முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அமைச்சரவை குறித்த அப்போது எந்த விவாதமும் எழாமல் இருந்தது.
சபாநாயகர் பதவி
அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்னரும்கூட பல வாரங்கள் கடந்த நிலையில் அமைச்சரவை இறுதி செய்யப்படாமலேயே இருந்தது. பாஜக தரப்பில் சபாநாயகர் பதவியும் இரண்டு அமைச்சர் பதவியும் தேவை என்று கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த காலத்தில் புதுவையிலும் சரி மற்ற மாநிலங்களிலும் சரி பாஜக அல்லாத அரசுகள் எப்படி கவிழ்த்தப்பட்டது என்பதைத் தெளிவாக உணர்ந்த ரங்கசாமி, சபாநாயகர் பதவியை பாஜகவுக்குக் கொடுக்க முதலில் ஒப்புக் கொள்ளவில்லை.
வேறு வழியில்லை
இருப்பினும், பாஜக தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்தது. இதனால் புதுவையில் அரசு அமைப்பதில் பல வாரங்களாக எந்தவொரு நடவடிக்கையும் நடக்காமலேயே இருந்தது. இதையடுத்து நீண்ட தாமதத்திற்குப் பின்னர் வேறுவழியின்றி சாபாநாயகர் பதவியை பாஜகவிற்குக் கொடுக்க ஒப்புக்கொண்டார் ரங்கசாமி. அதன்படி பாஜக எம்எல்ஏ ஏம்பலம் செல்வம் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார். புதுச்சேரியில் அரசியல் வரலாற்றிலேயே பாஜகவைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்
அமைச்சரவை பட்டியல்
அதைத் தொடர்ந்து தற்போது ஒரே வாரத்தில் புதுச்சேரி அமைச்சரவை பட்டியலைத் துணைநிலை ஆளுர் தமிழிசை சவுந்தரராஜனிடம் ரங்கசாமி இன்று வழங்கினார். ஐந்து அமைச்சர்களைக் கொண்ட இந்தப் பட்டியலில் மூன்று அமைச்சர்கள் என் ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவர் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும், பாஜ சார்பில் நமச்சிவாயம் மற்றும் ஊசுடு தொகுதி சட்டசபை உறுப்பினர் சாய் சரவணன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை பதவியேற்பு
சுமார் 52 நாட்களாகப் புதுச்சேரியில் நீட்டித்து வந்து குழப்பம் தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து புதிய அமைச்சர்கள் அனைவரும் நாளை பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே காலதாமதம் என்பதால் அதிகபட்சமாக வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் அனைவரும் பதவியேற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.