கர்நாடகா, ம.பி., புதுவை... எம்.எல்.ஏக்களை கூண்டோடு ராஜினாமா செய்ய வைத்து காங். அரசுகளை கவிழ்த்த பாஜக
புதுச்சேரி: கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் புதுவையில் எம்.எல்.ஏக்களை கூண்டோடு ராஜினாமா செய்ய வைத்து கடந்த 3 ஆண்டுகளில் 3 மாநில காங்கிரஸ் அரசுகளை கவிழ்த்திருக்கிறது பாஜக.
1980களில் தீவிர இந்துத்துவா போக்குடன் பாரதிய ஜனதா அரசியல் களத்துக்கு வந்தது. 1990களிலும் கூட இதே பார்முலாவுடன்தான் மாநிலங்களில் கால் பதித்தது பாஜக.
ஆனால் 2014-ல் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பாஜக அமர்ந்த பின்னர், எப்படியாவது ஆட்சிகளை பிடிக்க வேண்டும் என்கிற பார்முலாவை கடைபிடிக்கத் தொடங்கியது. குறிப்பாக பிற கட்சிகளை வேட்டையாடியேனும் ஆட்சியை கைப்பற்றுவோம் என்பது பாஜகவின் வியூகமாக இருக்கிறது.
குறுக்குவழி வியூகம்
நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியான குறுக்குவழிகளுடனேயே பாஜக அரசியல் ஆட்டத்தை ஆடி வருகிறது. திரிபுரா சட்டசபை தேர்தலில் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையே வளைத்துப் போட்டது பாஜக. இதனால் வெறும் 2% வாக்குகள் இருந்த பாஜக ஆட்சி அதிகாரத்தை பிடித்தது.
கர்நாடகாவில் கவிழ்ப்பு
இதேபோல் மேற்கு வங்கத்தில் இடதுசாரி வாக்கு வங்கியை தம் வசமாக்கி அங்கு அசைக்க முடியாத 2-வது பெரிய சக்தியாக உருவெடுத்தது. கடந்த 2019-ல் கர்நாடகாவில் காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி அரசுக்கு எதிராக அந்த அணியின் எம்.எல்.ஏக்களை கூண்டோடு ராஜினாமா செய்ய வைத்தது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நிலைக்கு தள்ளப்பட்ட குமாரசாமி ஆட்சியை பறிகொடுத்தார்.
கமல்நாத் அரசு கவிழ்ப்பு
கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்திலும் இதே பாணியில் விளையாடியது பாஜக. காங்கிரஸ் முதல்வராக இருந்த கமல்நாத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கூண்டோடு ராஜினாமா செய்ய வைத்தது. இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு அதிகாரத்தை இழந்தது.
புதுவை ஆட்சி கவிழ்ப்பு
இதே பார்முலாவை புதுச்சேரியிலும் செயல்படுத்தி இருக்கிறது பாஜக. காங்கிரஸ்-திமுக எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்ததன் மூலமும் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு நெருக்கடிக்குள்ளானது. பாஜகவின் 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க உரிமை இருக்கிறது என்ற காரணத்தால் நாராயணசாமி அரசு பெரும்பான்மை இழந்து ஆட்சி கவிழ்ந்துள்ளது.
தமிழகம் அடுத்த டார்கெட்?
பாஜகவைப் பொறுத்தவரையில் தேர்தலில் வெல்வதற்கு எத்தனை பெரிய கட்சியாக இருந்தாலும் அதை நாசம் செய்வதற்கு தயங்குவதில்லை. இருப்பினும் இன்னமும் தமிழகத்தில்தான் பாஜக வெளிப்படையாக தமது இந்த பாணி அரசியலை கையில் எடுக்கவில்லை. அப்படி தமிழகத்தில் பாஜக உண்மை முகத்துடன் ருத்ர தாண்டவமாடினால் எந்தெந்த கட்சிகள் பலி ஆடுகளாகுமோ என்பதுதான் எதிர்பார்ப்புக்குரியது.