ஓராண்டுக்கு பிறகு.. எலக்ஷன் டைமில்.. புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் ஆரம்பம்
புதுச்சேரி: புதுச்சேரியில் ஓராண்டுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் இன்று முதல் மீண்டும் மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று ஆய்வு செய்து பள்ளியிலேயே மதிய உணவை சாப்பிட்டார்.
Recommended Video
புதுச்சேரியில் கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா பொது முடக்கத்தால், அரசுப்பள்ளிகளில் வழங்கப்பட்டு வந்த மதிய உணவு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளில் மதிய உணவு வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி இன்று முதல் அரசுப்பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதனை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமௌலி, மகேஸ்வரி ஆகியோருடன் நேரில் சென்று, கிராமப்பகுதியில் உள்ள கலிதீர்த்தாள்குப்பம் அரசு மேனிலைப்பள்ளி மற்றும் சிறுவர் பள்ளியில் மதிய உணவு வழங்குவதை பார்வையிட்டார்.
அப்போது மதிய உணவை வாங்கி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சாப்பிட்டுப் பார்த்து தரத்தையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளிகளில் கொடுக்கப்பட்டு வரும் உணவு பொருள்களின் தரத்தை கேட்டறிந்த அவர். தொடர்ந்து மாணவர்களுக்கு தரமான உணவை தயாரித்து கொடுக்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.