புதுச்சேரி.. மதுபான ஆலைகளில் ஹாலோகிராம் மோசடி.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிமுக மனு!
புதுச்சேரி: மதுபான ஆலைகளில் போலி ஹாலோ கிராம் முத்திரை மூலம் மோசடி செய்து அரசின் வருவாயை சுரண்டுபவர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தவிடக்கோரி புதுச்சேரி மாநில அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ இன்று துணை நிலை ஆளுநருக்கு மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, புதுச்சேரி மாநில வருவாயில் கலால்துறை முக்கிய பங்கு வகித்து வருகிறது. இத்துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஆளும் காங்கிரஸ் அரசின் துணையோடு மதுபானம் தயாரிக்கும் உரிமையாளர்கள் போலி ஹாலோ கிராம் முத்திரை மூலம் அரசின் வருவாயை சுரண்டி பொருளாதார குற்றம் செய்து வருகின்றனர்.
குற்றத்தில் ஈடுபட்டுள்ள அனைவர் மீதும் அவர்களுடைய குற்றத்துக்கு துணை போயுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் மீதும் சிபிஐ விசாரணைக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் திமுக துணையோடு நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியில் தற்போது மதுபானம் தயாரிக்கும் பல்வேறு தொழிற்சாலைகளில் ஆளும் காங்கிரஸ் அரசின் துணையோடு போலி ஹாலோகிராம் ஒட்டி மிகப்பெரிய அளவில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சீனாவின் பிளான் 2049.. தடங்கலாக நின்ற இந்தியா.. திடீர் தாக்குதலுக்கு இதுதான் காரணம்.. பகீர் பின்னணி!
கலால்துறையில் சமீப காலமாக தங்களின் கண்காணிப்பில் தற்போது போலி ஹாலோகிராம் பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக இரண்டு மதுபான தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
போலி ஹாலோ கிராம் ஒட்டி மதுபான விற்பனை செய்ததன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.500 கோடி அளவில் கலால் வரியாக அரசுக்கு வரவேண்டிய வருவாய் அரசுக்கு வராமல் கபளிகரம் செய்யப்பட்டுள்ளது. இது இந்த மாநிலத்தில் நடைபெற்ற மிகப் பெரிய பொருளாதார குற்றமாகும்.
எனவே தற்போது நடைபெறும் சிபிசிஐடி விசாரணை என்பது பொருத்தமான ஒன்றாக இருக்காது. புதுச்சேரியில் இயங்கும் அனைத்து மதுபான உற்பத்தி நிறுவனங்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும். அதேபோன்று அரசுடன் ஒப்பந்தம் போட்டு ஹாலோகிராம் சப்ளை செய்யும் டெல்லி, பெங்களூர் நிறுவனங்களையும்,
அண்டை மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு பல்வேறு வகை மதுக்களை கொள்முதல் செய்து போலி ஹாலோகிராம் மூலம் விற்பனை செய்துள்ளவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர விரிவான முழு விசாரணை நடத்த சிபிஐயிடம் இப்பிரச்சனையை விட வேண்டும்.
எனவே மாநிலத்தின் மிக முக்கியமான பொருளாதார குற்றம் செய்துவரும் போலி ஹாலோ கிராம் மூலம் முறைகேடு செய்து தயாரித்துள்ள அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அவர்கள் செய்த குற்றப்பின்னணி மூலம் அரசுக்கு வரவேண்டிய வருமானத்தை அவர்களிடம் இருந்து திரும்பப்பெறவும் சிபிஐ விசாரணைக்கு தாங்கள் உத்தரவிட்டு, மாநிலத்தில் எந்த விதத்திலும் குற்றம் செய்பவர்கள் தப்பிக்க விடாமல் தாங்கள் தடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.