விவசாயம் செய்யப் போன இடத்தில் விஷ வண்டு கடித்து.. அதிமுக பிரமுகர் பரிதாப மரணம்
புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ புருஷோத்தமன் விஷ வண்டு கடித்து பலியான சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநில அ.தி.முக. செயலாளராக இருந்தவர் புருஷோத்தமன். இவர் முன்னாள் எம்எல்ஏவும் ஆவார். புருஷோத்தமனுக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இங்கு அடிக்கடி செல்வார் புருஷோத்தமன். அங்கு விவசாயப் பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது அங்கு சென்றிருந்தார் புருஷோத்தமன். விவசாயப் பணிகளை மேற்பார்வையிட்டபடி தானும் அதில் ஈடுபட்டிருந்தார். அப்போது விஷத்தன்மை வாய்ந்த செங்குளவி கொட்டி உள்ளது. துடித்துப் போன புருஷோத்தமன் வலி தாங்க முடியாமல் அலறினார். இதைப் பார்த்த விவசாயப் பணியாளர்கள் புருஷோத்தமனை மீட்டனர்.
பின்னர் அவரை முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்து போனார். விஷ வண்டு கடித்து புருஷோத்தமன் மறைந்த சம்பவம் புதுச்சேரி மாநில அதிமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.