செல்பியால் சிக்கிகொண்ட காங். எம்எல்ஏ ஜான்குமார்.. நடவடிக்கை கோரி அதிமுக போர்க்கொடி!
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டசபை நிகழ்வின் போது செல்பி எடுத்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் நாராயணசாமி பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து, அதுகுறித்து பேசிக்கொண்டிருந்த போது, அவையில் இருந்த நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், செல்பி எடுத்தார்.
அவருடன் அமர்ந்திருந்த அரசு கொறடா அனந்தராமனையும் சேர்த்து செல்பி எடுத்தார். இந்த படங்களை ஜான்குமார், உடனடியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் சட்டப்பேரவையில் விவாதித்து கொண்டிருந்தபோது, செல்போன் பயன்படுத்துவது தவறு. அதிலும் செல்பி எடுப்பதா என ஜான்குமாரை சமூக வலைதளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர். சட்டப்பேரவையில் ஜான்குமார் செல்பி எடுத்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் செல்பி எடுத்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகரிடம் அதிமுகவினர் மனு அளித்துள்ளனர்.
அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் சபாநாயகர் சிவகொழுந்துவிடம் அளித்துள்ள மனுவில், நேற்று நடைபெற்ற சட்டசபை நிகழ்வின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், அனந்தராமன் ஆகியோர் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற நிகழ்வின்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்பி எடுத்துக்கொண்டுது கண்டனத்திற்குரியது. சட்டமன்ற மாண்புகளை சீர்குலைக்கும் விதத்தில் நடைபெறும் இது போன்ற செயல்களை சபாநாயகர் கண்டிக்க வேண்டும். இதுபோன்று சட்டவிதிகளுக்கு புறம்பான செயல்கள் மீது சட்டமன்ற நடத்தை விதிகள் 288, 290 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளபடி சபாநாயகர் உரிய நடவடிக்கை வேண்டும். மேலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபையில் இல்லாதபோது, எங்களைப்பற்றி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசிய தகாத வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அன்பழகன் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.