புதுச்சேரி சட்டசபையில் அமளி.. அதிமுக, ரங்கசாமி, பாஜக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளிநடப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்று வரும் சிறப்பு சட்டமன்ற கூட்டம் அரசியல் உள்நோக்கத்துடன் கூட்டப்பட்டுள்ளதாகவும், பேரவையில் மக்கள் பிரச்சனைகள் பற்றி பேச அனுமதிக்கப்படவில்லை என கூறி என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் நீர்மேளாண்மையை பாதுகாத்தல், தமிழ் மொழி உள்ளிடக்கிய மும்மொழி கொள்கையை கடைபிடித்தல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் அமுல்படுத்த கூடாது, நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்காக புதுச்சேரியின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், புதுச்சேரியில் பல்வேறு மக்கள் பிரச்சனைகள் உள்ள நிலையில் அதைப்பற்றி விவாதிப்பதற்காக சட்டமன்றத்தை கூட்டாமல், முதல்வர் நாராயணசாமி அரசியல் உள்நோக்கத்தோடு இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டியுள்ளார்.
சிறப்பு சட்டமன்ற கூட்டம் எதற்காக கூட்டப்டுகின்றது என முறையாக எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கவில்லை எனவும், பேரவையில் மக்கள் பிரச்சனைகள் குறித்து எதிர்கட்சியினர் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் அவையை புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
தீர்மானம்:
முன்னதாக, சட்டசபையில் நீர் வளப் பாதுகாப்புதொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரியில் நீர் வளம் பாதுகாப்பதற்காக மத்திய அரசிடமிருந்து நிதி கோர முதல்வர் நாராயணசாமி பேரவையில் முன்மொழிந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நீர் மேலாண்மைக்காக ரூ.2,600 கோடிக்கு திட்டமிடப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய பிறகு ரூ.2கோடி தான் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டது.
ஆகவே புதுச்சேரியில் நீர் மேலாண்மையை பாதுகாத்திட ஜலசக்தி துறையின் மூலம் மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் நாராயணசாமி கொண்டு வந்த அரசு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.