கொரோனாவை விட கொடூரமான வைரஸ் பொருளாதாரத்தை தாக்கியுள்ளது.. சஞ்சய் தத்
Recommended Video
புதுச்சேரி: குடியுரிமை சட்டத் திருத்ததை திரும்பபெற மாட்டேன் என பிரதமர் கூறுவதன் மூலம் அவர் ஒரு சர்வாதிகாரி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும், கொரோனா வைரசைவிட, கொடூரமான வைரஸ் இந்திய பொருளாதாரத்தை பாதித்துள்ளதாகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் சஞ்சய் தத் குற்றம்ச்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தேசிய செயலாளரும், புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான சஞ்சய் தத், கடந்த காலங்களைவிட தற்போது தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு எதிரான ஆட்சியாக பாஜக ஆட்சி உள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து மத்திய பாஜக அரசை இந்துத்துவா அமைப்புகள் இயக்குவதை உறுதி செய்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய முதல் யூனியன் பிரதேசம் புதுச்சேரி. இதற்காக புதுச்சேரி முதல்வருக்கும், மாநில காங்கிரசுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புதுச்சேரி மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக என்.ஆர்.காங்கிரசும், அதிமுகவும் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளன என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெரும் பேச்சுக்கே இடமில்லை எனக்கூறும் பிரதமரின் கருத்து, அவரின் சர்வாதிகார ஆட்சியை காட்டுகின்றது. கொரோனா வைரஸைவிட கொடூரமான வைரஸ் நாட்டின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. ஆனால் இதைப்பற்றி பிரதமருக்கு கவலை இல்லை என சஞ்சய் தத் குற்றம்ச்சாட்டினார்.