ஹைட்ரோ கார்பன் திட்டம் நல்லதா.. கெட்டதா .. சொல்லுங்க பார்ப்போம்.. கிரண் பேடிக்கு காங். கேள்வி!
புதுச்சேரி: சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருவதாக கூறும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, சுற்றுச்சூழலை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என சஞ்சய் தத் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளிடம் அனுமதி பெறாமல் வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்த திட்டத்தால் நிலத்தடி நீர் அழிந்து, முற்றிலுமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் இரு மாநிலத்தை சேர்ந்தவர்களும் இதை எதிர்க்கின்றார்கள். புதுச்சேரி முதல்வரும் இந்த திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என உறுதியளித்தார்.
ஆனால் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தான் அதிக கவனம் செலுத்துவதாக, தம்பட்டம் அடிக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இந்த விவகாரத்தில் ஏன் மவுனம் சாதிக்கின்றார் என்று கேள்வியெழுப்பிய அவர், ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் கிரண்பேடி தனது நிலைப்பாட்டை உடனடியாக தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் கிரண்பேடி பாஜகவின் கைப்பாவையாக செயல்படுவது உறுதியாகிவிடும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கிரண்பேடி, ஊடகங்கள் ஊழல் முறைகேடுகளுக்கு தரும் முன்னுரிமைகளைவிட சின்ன சின்ன பாலியல் வன்கொடுமை விவகாரங்களுக்குதான் முன்னுரிமை தருகின்றார்கள் என தெரிவித்துள்ளார். கிரண்பேடியின் இந்த கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. தான் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை சின்னது, பெரியது என பிரித்து பார்ப்பது ஏற்புடையது அல்ல. இதேபோன்று பல விஷயங்களில் கிரண்பேடி முரண்பட்ட கருத்துக்களை கூறி குழப்பத்தை விளைவிப்பதாக குற்றஞ்சாடினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சஞ்ஜய் தத், முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் ஆளும் அரசு மீது புகார் கூறியதால் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தனவேலு எம்.எல்.ஏ வுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து உரிய பதில் கிடைத்தவுடன், மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.