2 நாள் கடையெல்லாம் லீவு.. இந்தப் பக்கம் வந்துராதீங்க.. "நடுக்கத்தில்" புதுச்சேரி "குடி"மக்கள்!!
புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் மதுக்கடைகளை மூட கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 23 ஆம் தேதி காலை 8 மணி முதல் 6 மையங்களில் எண்ணப்பட உள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும், மாநில தேர்தல் துறை விரிவாக செய்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 23 ஆம் தேதி மற்றும் 24 ஆம் தேதி மாலை 4 மணி வரை இரண்டு நாட்களுக்கு அனைத்து விதமான மதுக்கடைகளையும் மூடி வைக்கும்படி கலால் துறை துணை ஆணையர் தயாளன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தடையை மீறி மது விற்பனை செய்தால் கலால்துறை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துணை ஆணையர் தயாளன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 23 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் இரண்டு நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட உள்ளது புதுச்சேரி குடிமகன்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.