மூன்று மாத கேப்பில் மீண்டும் 'அதே ஃபீலிங்ஸ்' - தமிழ் மொழியும், அமித்ஷா வருத்தமும்
காரைக்கால்: 'உலகின் மிக உன்னதமான மூத்த மொழியான தமிழில் பேச முடியவில்லையே என்பதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்' என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழக்க, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காரைக்காலில் பிரச்சாரம் மேற்கொண்டார். 'மலரட்டும் தாமரை, ஒளிரட்டும் புதுச்சேரி' என்ற முழக்கத்துடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது, சபாநாயகர் சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் ஜான்குமார், வெங்கடேசன் ஆகியோர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.இந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போதே, அடுத்த அதிரடி திருப்பமாக சபாநாயகர் சிவக்கொழுந்துவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அமித் ஷா, "காங்கிரசில் குடும்ப ஆட்சியே நடக்கிறது. அந்த கட்சி நாட்டில் இருந்தே காணாமல் போகும். நன்றாக பொய் சொல்பவர் விருது நாராயணசாமிக்கு தான் கொடுக்க வேண்டும். தகுதிக்கும் திறமைக்கும் அவர் வாய்ப்பு கொடுத்ததே இல்லை. புதுச்சேரிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசு திட்டங்களை வழங்கியது. ஆனால், இந்த திட்டங்கள் மக்களுக்கு முறையாக பயன்படுத்தவில்லை. இதற்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி தான் காரணம்.
உலகின் மிக உன்னதமான மூத்த மொழியான தமிழில் பேச முடியவில்லையே என்பதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். பிரதமர் மோடி தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேச ஆசைப்படுகிறார். நானும் தமிழ் கற்றுக்கொண்டு பேசவேன்" என்று தெரிவித்தார்.
சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை.. திருடுவதற்காகவே பக்கத்து வீட்டை வாங்கிய திருடர்கள்!
முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இரண்டு நாள் அரசு பயணமாக அமித்ஷா சென்னை வந்திருந்தார். அப்போது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அமித்ஷா, "உலகின் தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்" என்று கூறியிருந்தார். தற்போது மூன்று மாதம் கழித்து இன்று புதுச்சேரியில் மீண்டும் தமிழ் பேச முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, இன்று காலை மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடியும், 'எவ்வளவு முயன்றும் என்னால் சரியாக தமிழ் கற்றுக் கொள்ள முடியவில்லை' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.