''அன்னைக்கு ராகுல் ஜி லீவுல இருந்திருப்பாரு'' - மீன்வளத்துறை அமைச்சக விவகாரத்தில் அமித் ஷா கிண்டல்
காரைக்கால்: மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகம் இருப்பதே தெரியாத காங்கிரஸ் கட்சி தான் புதுச்சேரியை முன்னற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லப் போகிறதா? என்று அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும், மே 2-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் விழுப்புரம், புதுவையில் பிரச்சார பொதுக் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமித்ஷா இன்று அதிகாலை சென்னைக்கு வருகை தந்தார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் அவர் புதுவையில் உள்ள காரைக்காலுக்கு சென்றார். அங்கு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அமித்ஷா பேசினார்.
ராகுல் கோரிக்கை
அமித் ஷா உரைக்கு முன்னர் ஒரு சிறிய பிளாஷ்பேக்கை பார்த்துவிடுவோம். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த வாரம் புதுச்சேரிக்கு சென்றிருந்த போது, அங்குள்ள முத்தியால்பேட்டையில் மீனவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, "நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு 3 சட்டங்களை நிறைவேற்றி உள்ளது. மத்தியில் நில விவசாயிகளுக்கு அமைச்சகம் இருக்கும்போது, கடல் விவசாயிகளுக்கு ஏன் அவ்வாறு இல்லை? மீனவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்'' என்றார். ராகுல்காந்தியின் இந்த கோரிக்கையை மேற்கோள்காட்டி மத்திய மீன்வள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சராக இருக்கும் கிரி ராஜ் சிங், "மத்திய அரசு கடந்த 2019 மே 31-ம் தேதியே மீன்வளத் துறைக்கு புதிய அமைச்சகத்தை உருவாக்கியது என்பது ராகுலுக்கு தெரியவில்லை. இந்த அமைச்சகம் மூலம் மீனவர்களுக்கு இதுவரை 3683 கோடி ரூபாய் அரசு செலவிட்டுள்ளது" என்று ட்வீட் செய்திருந்தார். மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் இருப்பது தெரியாமல் அதை அமைக்க வேண்டும் என்று ராகுல் பேசிய விமர்சனத்துக்கு உள்ளானது.
விடுப்பில் இருந்தீர்கள்
இந்நிலையில், காரைக்காலில் இன்று பேசிய அமித் ஷா இதே மீன் மேட்டரை கையிலெடுத்தார். அதில், "கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்தியில் மீனவர்களுக்காக அமைச்சகமே செயல்பட்டு வரும் நிலையில், அடிப்படை அறிவு கூட இல்லாத ராகுல் காந்தி மீனவர்களுக்கு தனி அமைச்சரவை அமைக்கப்படும் என புதுச்சேரியில் பேசியுள்ளர். இவருக்கா உங்கள் வாக்கு? பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே மீனவர்களுக்கான தனி அமைச்சரவையை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். சகோதரர் ராகுல், அப்போது விடுப்பில் இருந்தார். அதனால் அவருக்கு இந்த விஷயமே தெரியவில்லை போல" என்று தெரிவித்தார்.
அவருக்கே தெரியாத போது
"புதுச்சேரி மக்களை பார்த்து நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மீன்வளத்துறை பற்றிய விஷயமே அவருக்கு தெரியாத போது, இந்த கட்சி தான் புதுச்சேரி மாநிலத்தை முன்னேற்றப் போகிறதா?" என்று அமித் ஷா கேள்வி எழுப்பினார். மேலும், உள்ளாட்சி அமைப்புகள் தேர்தலை நடத்தாமல் உள்ளது. இதற்கு பாஜக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் என்ற பயம் தான் காரணம். வரும் சட்டசபை தேர்தலில் பாஜக புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும். புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கு பறக்கும் பாதை திட்டம் நிறைவேற்றப்படும்" என்றார்.
இலவச கேஸ்
மேலும், காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் விழுப்புரம் நான்கு வழி சாலை, காரைக்காலில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என மோடி அறிவித்துள்ளார். இத்திட்டங்களால் காரைக்கால் வளர்ச்சி அடையும். மத்திய அரசு மீனவர்களுக்கு என்று 50 ஆயிரம் கோடி ரூபாயில் இந்தியா முழுவதும் திட்டம் நிறைவேற்றி வருகிறது. அந்த நிதி புதுச்சேரி மாநிலத்திற்கு கிடைக்கும். ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தில் சாமானியர்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ரேசன் பொருள் வாங்க முடிகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்த 70 ஆண்டுகளில் பெண்களை பற்றி கவலைப்படவில்லை. ஆனால் மோடி பதவியேற்ற 5 ஆண்டுகளில் பெண்களுக்கு இலவச கேஸ் வழங்கியுள்ளார்.
முன்னணி மாநிலம்
புதுச்சேரி மாநிலத்தில் 24 மருத்துவமனை மூலம் ஆயூஸ்மான் காப்பீட்டு திட்டம் வழங்கப்படுகிறது, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கும். பிரதமர் மோடி புதுச்சேரியை வணிகம், கல்வி, ஆன்மிகம் , சுற்றுலா உள்ளிட்டவைகளில் முன்னணி மாநிலமாக மாற்றப்படும்" என்றும் கூறியுள்ளர்