புதுச்சேரி கடலில் மூழ்கி பெங்களூர் ஐடி ஊழியர் பலி.. இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
புதுச்சேரி: புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தவர்கள், கடலில் இறங்கி குளித்தபோது ஒரு இளைஞர் மாயம். பிணமாக ஒருவர் மீட்பு. 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் சுற்றுலாப்பயணிகளிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரிக்கு தினமும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதிலும் வார விடுமுறை நாட்களான, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
புதுச்சேரியில் படகு இல்லம், ஊசுட்டேரி, ஆரோவில், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாத்தளங்கள் இருந்தாலும் அனைவரையும் வெகுவாக கவரும் இடமாக கடற்கரை உள்ளது. சுற்றுலாப்பயணிகள் கடற்கரையை பார்த்தவுடன் இறங்கி குளிக்கத் தொடங்கிவிடுகின்றனர்.
கடலில் எந்த பகுதியில் ஆழம் இருக்கின்றது என்பதை அறியாமல், கடலில் குளிப்பதால் அதிகளவு கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளில நடைபெறுகிறது. இதனால் போலீசார் கடற்பகுதிகளில் குளிக்க தடை விதித்து, ஆபத்தான பகுதி என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இருப்பினும் இதை பொருட்படுத்தாமல் ஆவல் காரணமாக கடலில் இறங்கி குளிப்பதால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று புதுச்சேரி கடற்கரையில் தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்பரப்பில் ராணிப்பேட்டையிலிருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த 12 இளைஞர்கள் கடலில் இறங்கி ஆர்வத்துடன் குளித்துள்ளனர். அப்போது கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அவர்களில் நான்கு கடலில் மூழ்கி தத்தளித்தனர்.
இதை பார்த்த அங்கிருந்த மீட்பு குழுக்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள் கடலில் இறங்கி உடனடியாக 3 வாலிபரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ஒரு இளைஞர் மாயமாகியுள்ளார் அவரை தேடும் பணியில் கடலோர காவல்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் புதுச்சேரியை அடுத்த தந்திராயன்குப்பம் கடற்கரையில் பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் 8 பேர் சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் தந்திராயன்குப்பன் கடற்கரையில் குளித்தபோது கடலில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் டிப்போ (24) மட்டும் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட ஒரு இளம் பெண் ஆபத்தான நிலையில் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சுற்றுலா வந்தவர்கள் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவம் புதுச்சேரி கடற்கரையில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.