எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் என்ன ஒட்டிப்பிறந்த இரட்டையர்களா- திருநாவுக்கரசர் கேள்வி
புதுச்சேரி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களா என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார்.
புதுவை முதல்வர் நாராயணசாமியின் தாயார் மறைவையொட்டி அவரை இன்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் திருநாவுக்கரசர். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களும், அரசின் நிவாரண பணிகளும் சரியாக சென்றடையவில்லை.
புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு உடனடியாக ரூ.5000 கோடி ரூபாயை வழங்க வேண்டும். தமிழக முதல்வரும் துணை முதல்வரும் என்ன ஒட்டிப்பிறந்த இரட்டையர்களா.
இருவரும் ஒன்றாக சேர்ந்தே புயல் பாதிப்புகளை முழுமையாக பார்வையிடவில்லை. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் தமிழகத்துக்கு வருகை தருகிறார். தேர்தலுக்கு பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றார் திருநாவுக்கரசர்.