புதுச்சேரியில் அடுத்த பரபரப்பு.. மார்ச் 2ம் தேதி பட்ஜெட்.. இடைக்கால நிதி நிலை அறிக்கைதான் தாக்கல்
புதுச்சேரி: புதுச்சேரியில் மார்ச் 2ம் தேதி இடைக்கால நிதி நிலை அறிக்கையை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்யவுள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே தொடர்ந்து மோதல்போக்கு இருந்து வருவதால், பெரும்பாலான மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, இலவச அரிசி உள்ளிட்ட எந்தவொரு திட்டமும் செயல்படுத்த்படாமல் உள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே மக்கள் நலத்திட்டங்களுக்கு ஆளுநர் கிரண்பேடி தடையாக இருப்பதாகக்கூறி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில், அமைச்சர்கள், காங்கிரஸ் - திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக 6 நாட்கள் ஆளுநர் மாளிகைக்கு வெளியே கிரண்பேடியை கண்டித்து தர்ணா போராட்டம் நடத்தியும், ஆளும் அரசின் கோரிக்கைகளுக்கு கிரண்பேடி செவிசாய்க்கவில்லை.
இதுபோன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 2 ந்தேதி காலை 11மணிக்கு கூட இருப்பதாக சட்டப்பேரவை செயலர் விண்செண்ட் ராயர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால், நாடாளுமன்ற தேர்தலையொட்டி மார்ச் 2 ஆம் தேதி கூடவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. அரசின் அடுத்த நான்கு மாத செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட உள்ளது.
இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்கின்றார். மேலும் ஆளும் அரசு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவில்லை எனக்கூறி என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பேரவையில் கேள்வி எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.