ஏடிஎம் எந்திரத்தில் ஒட்டபட்ட மர்ம சிப்.. புதுச்சேரியில் பரபரப்பு.. மக்களே உஷார்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் பிரபல வங்கியின் ஏடிஎம் எந்திரத்தில் மர்ம சிப் பொருத்தப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் அட்டையின் ரகசிய எண்ணை ஒரு கும்பல் ஸ்கிம்மர் கருவி பொருத்தி கண்டறிந்து, பின்னர் போலி ஏடிஎம் அட்டைகள் தயாரித்து, பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை திருடினர்.
பணத்தை பறிகொடுத்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை அனுகியபோதுதான் இந்த நூதன கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறைக்கே தெரியவந்தது. முதலில் சட்டம் ஒழுங்கு போலீசார் இந்த வழக்குகளை விசாரித்து வந்த நிலையில், வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், ஏடிஎம் கொள்ளை வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
விசாரணை
இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கொள்ளை கும்பலை கண்டுபிடித்தனர். இதில் முக்கிய குற்றவாளியான அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சந்துருஜி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தியா, சந்துருஜியின் தம்பி மணிசந்தர், பீட்டர், தினேஷ், இர்பான் ரகுமான் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோடிக்கணக்கில் திருட்டு
அவர்களிடமிருந்து பல கோடி ரூபாய் பணம், ஸ்கிம்மர் கருவி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணை நடத்திய போலீசார், ஏடிஎம் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு சர்வதேச கொள்ளை கும்பலுடனும் தொடர்பு இருப்பதையும் கண்டறிந்தனர்.
2018ல் பரபரப்பு
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த ஏடிஎம் கொள்ளை வழக்கு புதுச்சேரி மட்டுமின்றி நாடுமுழுவதும் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அப்போது இந்த வழக்கில் தீவிரம் காட்டிய சிபிசிஐடி போலீசார், அதன்பிறகு நாளடைவில் அமைதியாகி விட்டனர். தற்போது அந்த வழக்கு எந்த நிலையில் உள்ளது? பொதுமக்களிடம் இருந்து திருடப்பட்ட பல கோடி ரூபாய் பணம் மீட்கபட்டதா? சர்வதேச கொள்ளை கும்பலை பிடித்தார்களா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல், புரியாத புதிராகவே உள்ளது.
மீண்டும் அட்டகாசம்
இந்நிலையில் புதுச்சேரியில் மீண்டும் ஏஎடிம் கொள்ளை அரங்கேறத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பணிபுரியும் ஊழியர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திடீரென மாயமாகி வருகிறது. இதுகுறித்து புகார் அளித்தாலும் காவல்துறை சரியான நடவடிக்கை எடுப்பதில்லை என்பது, பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
ஈசிஆர்
இதனிடையே சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் ஒருவர் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அந்த ஏடிஎம் மையத்தில் பாஸ்வேர்ட் பதிவு செய்யும் பகுதியில், மர்ம அட்டை ஒன்று ஒட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த அட்டையை எடுத்து பார்த்தபோது, அதில் மெமரி கார்டு, சிப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் இருந்தன.
முறையீடு
உடனே அதை வீடியோவாக பதிவு செய்து, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார். இதைப்பார்த்து அதிர்ந்துபோன வங்கி அதிகாரிகள் லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏடிஎம் மையத்தில் மர்ம சிப் இருந்த சம்பவத்தால், ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு புதுச்சேரி மக்கள் அச்சப்பட்டு வருகின்றனர்.
உஷார் மக்களே
ஏற்கனவே ஏடிஎம் மையங்களில் இருந்து பொதுமக்களின் பணம் பல கோடி ரூபாய் திருடுப்போன சம்பவம் போல் மீண்டும் நடைபெறாமல் இருக்க, காவல்துறை மற்றும் வங்கி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.