லாக்டவுனில் தாராள சேவை.. புதுச்சேரியில் வீட்டின் கொல்லைப்புறத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல்
புதுச்சேரி: புதுச்சேரியில் திருட்டுத்தனமாக செயல்பட்டு வந்த கள்ளச்சாராய ஆலையை கலால் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து, ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலான சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மாநிலம் முழுவதிலும் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் சாராயக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்பவர்களை அவ்வப்போது போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி அருகே ஆண்டியார்பாளையம் கிராமத்தில் கள்ளச்சாராயம் தயாரித்து, விற்பனை செய்யப்படுவதாக கலால் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கலால் துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆண்டியார்பாளையம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில், கள்ளத்தனமாக சாராயம் தயாரிப்பதை கண்டுபிடித்தனர்.
கலால் அதிகாரிகள் மற்றும் போலீசார் வருவதை அறிந்து சாராயம் தயாரித்தவர்கள் தப்பிச் சென்றனர். இதனையடுத்து கிராம நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் அந்த இடத்தின் பூட்டை உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், அங்கிருந்த 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 பிளாஸ்டிக் கேன்களில் அடைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் கள்ளச்சாராயம், தலா 200 மி.லி அளவில் அடைக்கப்பட்டிருந்த 270 சாராய பாக்கெட்டுகள், சாராயம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தின் மதிப்பு 1.50 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே இடத்தின் உரிமையாளர் ராஜசேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
இதனிடையே ஊரடங்கு உத்தரவால் மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்த நாளில், சோரியங்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து, செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து அதிக விலைக்கு விற்பனை செய்துவந்துள்ளனர்.
இதுகுறித்து பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்று விசாரணையில் ஈடுபட்ட போலீசார், சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்துவந்தது சோரியாங்குப்பம் நடுத்தெருவைச் சேர்ந்த வைத்திலிங்கம், முருகராஜ், கடுவனூர் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த மாயவன் ஆகியோர் அதிக விலைக்கு விற்பதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 100 க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.