பால் குடிங்க.. அப்படியே கொரோனாவிடம் விழிப்புணர்வா இருங்க.. இது புதுச்சேரி மெசேஜ்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பால் பாக்கெட் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வீடு வீடாக சென்று கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தகவல்கள், நேரடியாக பொதுமக்களின் இல்லங்களை சென்றடையும் வகையில் அரசு நிறுவனமான பாண்லே வினியோகிக்கும், பால் பாக்கெட்டுகளின் உறையின் மேல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
"இருமல், காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்" "கைகளை அடிக்கடி சோப்பினால் கழுவ வேண்டும்" "முகமூடி அணிய வேண்டும், மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும்" என்கிற வாசகங்கள் அச்சிடப்பட்டு பாண்லே பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
நாள்தோறும் காலையில் வினியோகிக்கப்படும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரை லிட்டர் பாக்கெட்டுகளிலும், மாலையில் சுமார் 70 ஆயிரம் அரை லிட்டர் பாக்கெட்டுகளிலும் இந்த வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.