சுகாதார கூட்டுறவு நிறுவனங்களுக்கு, தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் ரூ.10,000 கோடி நிதி வழங்குகிறது
சென்னை: தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்ட பூர்வ நிறுவனமாகும். இந்த நிறுவனம் கூட்டுறவுகள் மூலம் சுகாதார உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ஒரு புதியத்திட்டத்தை வகுத்துள்ளது.
'கூட்டுறவுகள் மூலம் சுகாதாரம்' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தினை மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு. புருஷோத்தம ரூபாலா இன்று துவக்கிவைத்து தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் மூலம் கூட்டுறவு நிறுவனங்களுக்கு எதிர்வரும் ஆண்டுகளில் ரூ.10,000 கோடி அளவிற்கு சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த கால கடனாக இத்திட்டத்தின் மூலம் வழங்கும் என தெரிவித்தார்கள்.
மேலும் தற்போதைய உலகளாவிய நோய் தோற்று காலத்தில் கூட்டுறவுகள் மூலம் சுகாதார உள் கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் கூட்டுறவுச் சங்கங்களில் இணைந்துள்ள கிராமப்புற விவசாயிகளின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரம் மேம்படும் என்ற அடிப்படையில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திரு சந்தீப்குமார் நாயக் தெரிவிக்கையில், கூட்டுறவுகள் மூலம் நடத்தப்படும் 52 மருத்துவமனைகள் 5,000க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் இயங்கி வருகிறது எனத் தெரிவித்தார்.
இப்புதிய திட்டத்தின் மூலம் கூட்டுறவு நிறுவனங்கள் மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவைகளை வழங்குவதற்கு ஊக்கமாக அமையும். தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் இத்திட்டம் தேசிய சுகாதார கொள்கையின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது. இவை 2017 ஆண்டின் தேசிய சுகாதார கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பரிணாமங்களையும் உள்ளடக்கி உள்ளது. குறிப்பாக ஆரோக்கியத்தில் முதலீடு, சுகாதார சேவைகளை ஒழுங்கமைத்தல், தொழில்நுட்பங்களுக்கான அணுகுதல், மனித வளங்களை மேம்படுத்துதல், மருத்துவ பன்மைத்துவத்தை ஊக்குவித்தல், மலிவு சுகாதார பராமரிப்பு போன்றவை கிராமப்புற மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும். இத்திட்டத்தின் மூலம் மருத்துவமனைகள், மருத்துவக் கல்வி, செவிலியர் கல்வி, துணை மருத்துவக் கல்வி, சுகாதார காப்பீடு போன்றவைகளை ஏற்படுத்தி கூட்டுறவுகள் மூலம் அனைவரும் பயன்பெற உதவிகரமாக அமையும்.
மாண்புமிகு பிரதமர் அவர்களால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ல் தொடங்கப்பட்ட தேசிய மின்னணு சுகாதார கொள்கைக்கேற்ப தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் இத்திட்டமானது கிராமப்புறங்களை மேம்படுத்த உதவும். கிராமப்புறங்களில் மாற்றத்தை கொண்டுவருவதுடன் வலுவான கூட்டுறவு அமைப்புகளின் மூலம் ஒருங்கிணைந்த முழுமையான சுகாதார சேவைகளை மக்களுக்கு வழங்க இயலும். இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் கூட்டுறவுகள் மத்திய அல்லது மாநில அரசால் வழங்கப்படும் தகுதியான மானியத்தினை பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சுகாதார கூட்டுறவு நிறுவனங்கள் அதனை நவீனமயமாக்கல், விரிவாக்கம் செய்தல், பழுதுபார்ப்பு, மருத்துவமனை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வி மேம்பாடு உள்ளிட்ட கீழ் கண்ட சேவைகளை இத்திட்டத்தின் மூலம் பெறலாம்.
மருத்துவமனைகள் மற்றும் / அல்லது மருத்துவ / ஆயுஷ் / பல் / நர்சிங் / மருந்தகம் / துணை மருத்துவம் / பிசியோதெரபி கல்லூரிகள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் மேற்படிப்பு கல்வி படிப்பிற்கு, யோகா ஆரோக்கிய மையம், ஆயுர்வேதம், அலோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி மற்றும் பிற பாரம்பரிய மருத்துவ சுகாதார மையங்கள், முதியோருக்கான சுகாதார சேவைகள், நோய்த்தடுப்பு பராமரிப்பு சேவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார சேவைகள், மனநல சுகாதார சேவைகள், அவசரகால பிரிவு, பிசியோதெரபி மையம், நடமாடும் மருத்துவ சேவைகள், சுகாதார மன்றம் மற்றும் உடற்பயிற்சி மையம், ஆயுஷ் மருந்து உற்பத்தி, மருந்து சோதனை ஆய்வகம், பல் பராமரிப்பு மையம், கண் பராமரிப்பு மையம், ஆய்வக சேவைகள், நோய் கண்டறிதல் சேவைகள், இரத்த வங்கி / மாற்று சேவைகள், பஞ்சகர்மா / தொக்கனம் / க்ஷார் சூத்திர சிகிச்சை மையம், யுனானி (இலாஜ்பில்டாட்பீர்) மையத்தின் ரெஜிமெண்டல் சிகிச்சை, தாய்வழி சுகாதாரம் மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள், பாலியல் மற்றும் குழந்தை சுகாதார சேவைகள், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் நிதி பெற தகுதியுள்ள பிற சேவைகள், மின்னணு மருத்துவ சேவை மற்றும் தானியங்கி மருத்துவ சேவைகள், சுகாதார தளவாடங்கள், மின்னணு ஆரோக்கியம் தொடர்பான தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ) அங்கீகாரம் பெற்ற சுகாதார காப்பீடுகள்.
உணவுப் பொருட்கள் மூலமாக வீட்டிற்குள் நுழையும் கொரோனாவைத் தடுப்பது எப்படி?
இதுகுறித்து திரு. வி.எம். சந்திரசேகரன், மண்டல இயக்குநர் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம், சென்னை, அவர்கள் இது குறித்து குறிப்பிடுகையில்: சுகாதார மையங்களை நடத்தும் கூட்டுறவுச் சங்கங்களின் நடைமுறை மூலதன தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக இத்திட்டத்தில் நடைமுறை மூலதனம் மற்றும் விளிம்பு தொகை ஆகியவை கடனாக வழங்கப்படும். கூட்டுறவுச் சங்கங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பெண்களாக இருப்பின் அந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டியில் ஒரு சதவிகிதம் குறைக்கப்படும்.
தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் 1963 ஆம் ஆண்டில் இந்திய பாராளுமன்ற சட்டத்தின் கீழ் கூட்டுறவு நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக தோற்றுவிக்கப்பட்டு அன்று முதல் இதுவரை கூட்டுறவு நிறுவனங்களுக்கு நிதிஉதவியாக சுமார் ரூ.1.60 லட்சம் கோடிவரை வழங்கியுள்ளது.