எதிர் நீச்சல் போட்ட ஆமைக்குஞ்சுகள்.. ஆச்சரியத்துடன் பார்த்த சுற்றுலாப் பயணிகள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் அரியவகை ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள் இட்டுச் சென்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகளை பாதுகாத்து, முட்டையிலிருந்து வெளிவந்த ஆமை குஞ்சுகளை வன அலுவலர்கள் புதுச்சேரி கடலில் பாதுகாப்பாக விட்டனர்.
Recommended Video
இந்திய ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கும் ஆலிவ் ரெட்லி எனும் அபூர்வ வகை ஆமைகள் ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலங்களில் கடற்கரை பகுதிக்கு வந்து மணலில் முட்டையிட்டு திரும்பி சென்று விடும். இந்த முட்டைகளில் இருந்து 45 முதல் 50 நாட்களுக்குள் ஆமை குஞ்சுகள் பொறிந்து வெளிவந்து தாமாகவே கடலுக்குள் சென்று விடும்.
ஆனால் பெரும்பாலான ஆமை முட்டைகள் கடற்கரை பறவைகள், விலங்கினங்கள் மற்றும் மனிதர்களால் அழிக்கப்படுகின்றன. மேலும் முட்டையிட கரைக்கு வரும் ஆலிவ் ரெட்லி ஆமைகள், மீன் வலைகளில் சிக்கியும், படகுகளின் துடுப்புகளில் அடிபட்டும் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் இவ்வகை ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு வருகிறது.
அரியவகை ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு புதுச்சேரி வனத்துறை மீனவர்களுடன் இணைந்து புதுச்சேரி எல்லைக்குட்பட்ட வீராம்பட்டினம், சின்னவீராம்பட்டினம், நரம்பை, மூர்த்திக்குப்பம் புதுக்குப்பம், பூரணாங்குப்பம் புதுக்குப்பம், நல்லவாடு உள்ளிட்ட கடற்கரை பகுதியில் ஆமை முட்டைகளை சேகரித்து, பொறிப்பகத்தில் பாதுகாப்பாக புதைத்து வைத்து, குஞ்சுகள் பொரித்ததும் அதனைகடலில் விடும் பணியை ஆண்டுதோறும் செய்து வருகிறனர்.
அந்த வகையில் இந்தாண்டு கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகள் சேகரிக்கப்பட்டு, நரம்பை மற்றும் புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் பொறிப்பகம் ஏற்படுத்தி மணலுக்குள் புதைத்து வைத்து பாதுகாத்து வருகின்றனர். அதில் நரம்பை கிராமத்தில் உள்ள பொறிப்பகத்தில் இருந்து நேற்று முட்டைகள் பொறிந்து வெளிவந்த 200 க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுளை வனத்துறை ஊழியர்கள் சேகரித்து மீனவர்கள் உதவியுடன் நரம்பை கடலில் விட்டனர்.
அப்போது ஆமை குஞ்சுகள் அலையை எதிர்த்து நீந்தி கடலுக்குள் சென்றன. இதனை வன ஆர்வலர்கள் மற்றும் கடற்கரைக்கு வந்த சுற்றுலாபயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.