கிரண் பேடிக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்க விட்ட காங்கிரஸார்
புதுச்சேரி: புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்க விட்டு காங்கிரஸார் போராட்டம் நடத்தியுள்ளனர்.
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்படுவதாக கூறி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆளுநர் மாளிகை முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்து முதலமைச்சர் நாராயணசாமி அமைசர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி அவர்களிடம் பேசுகையில், தர்ணா போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில்,கூட்டணி கட்சிகள் அமைச்சர்கள் கேட்டு கொண்டதன் அடிப்படையில் தர்ணா போராட்டத்திண் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படுமெனவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இதனிடையே இளைஞர் காங்கிரஸார் ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அதன்பின் கிரண்பேடிக்கு கண்டனத்தை தெரிவித்து கருப்பு பலூன்களையும் பறக்கவிட்ட அவர்கள் கிரண்பேடியின் உருவபடத்தினை கிழித்து எரிந்தனர்.