தனியார் வங்கி ஊழியர் கழுத்தறுத்து கொலை.. புதுவையில் 3 நாளில் 3 பேர் கொலை.. பொதுமக்கள் பீதி
புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் வங்கி ஊழியர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதுச்சேரியில் கடந்த 3 நாட்களில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவிலூர் அருகே மாடாம்பூண்டி கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (22). அங்குள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவர் புதுச்சேரி அடுத்த திருபுவனை பாளையம் பகுதியைச் சேர்ந்த காயத்திரி என்ற பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
ராஜேஷ்குமார் திருமணத்துக்கு பிறகு திருபுவனை பாளையத்தில் மனைவியுடன் வசித்து வந்தார். திருக்கோவிலூரில் பணிபுரிந்து வந்ததால் வாரம் ஒருமுறை வீட்டுக்கு வந்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று மாலை காயத்திரியின் சகோதரர் செல்வராஜ், ராஜேஷ்குமாரை மதுக்குடிக்க அழைத்துச் சென்றுள்ளார்.
அதன்பிறகு இரவு ராஜேஷ்குமார் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ராஜேஷ்குமார் திருபுவனை பாளையம் மல்லிகை நகர் பகுதியில் இன்று கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது அருகில் மது பாட்டில், காலனிகள் கிடந்தன. அவருடன் சென்ற செல்வராஜை காணவில்லை.
இது குறித்து அப்பகுதி மக்கள் திருபுவனை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் ராஜேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருபுவனை போலீஸார் ராஜேஷ்குமாருடன் சென்ற செல்வராஜை தேடி வருகின்றனர். செல்வராஜை காணாததால் அவர் தான் கொலை செய்தாரா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்தனரா? என்றும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி எரித்து கொன்ற கணவன்
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக புதுச்சேரியில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. மதுக்கடைகள் திறக்கப்பட்ட பிறகு அடிக்கடி மோதல்கள் அதிகரித்து வருகின்றன. கொலையும் நடக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 3 நாட்களில் 3 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கத்தில் வடமாநில தொழிலாளி பிரமோத்குமார் சிங் என்பவர் கொலை செய்யப்பட்டார் கிடந்தார். அதுபோல் புதுச்சேரி நடேசன் நகர் பகுதியில் உருளையன்பேட்டையைச் சேர்ந்த அருள் என்பவர் நேற்று மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். தற்போது திருபுவனை பாளையம் பகுதியில் வங்கி ஊழியர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தொடர் கொலை சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.