பாரத் பந்த்: புதுவையில் அரசு, தனியார் பேருந்துகள் ஓடவில்லை- அனைத்து நிறுவனங்களும் மூடல்
புதுச்சேரி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பேருந்துகள், டெம்போக்கள் ஓடவில்லை. தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள், தொழிற்சங்க அமைப்புகள், சமூகநல அமைப்பினர், விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இன்று நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்த விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, மதிமுக, மக்கள் நீதி மய்யம், ஆம்ஆத்மி மற்றும் அனைத்துத் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இன்று காலை 6 மணிக்கு புதுவையில் பந்த் போராட்டம் தொடங்கியது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டெம்போ, ஆட்டோ ஆகியவை இயங்கவில்லை.
இதனால் புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. தனியார் வர்த்தக நிறுவனங்கள், பெரிய மார்க்கெட், குபேர் அங்காடி உள்ளிட்ட புதுச்சேரியில் அனைத்து கடைகளும் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.
மேலும் ராஜாதியேட்டர் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், பாகூர், வில்லியனூர், திருக்கனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்