பழையன கழிதலும்.. புதியன புகுதலும்.. புதுச்சேரியில் போகி.. கோலாகலக் கொண்டாட்டம்!
புதுச்சேரி: பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பொங்கலுக்கு முந்தைய நாளான இன்று, புதுச்சேரி முழுவதும் போகிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மேளதாளங்களை இசைத்து, போகி பண்டிகையை கொண்டாடினர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள், போகிப்பண்டிகையுடன் இன்று தொடங்குகின்றது. குறிப்பாக பொங்கல் என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும், ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். பொங்கல் பண்டிகை தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாக கொண்டாடப்படுகின்றது. எனினும் கிராமங்களில்தான் இந்தப் பண்டிகையில் கொண்டாட்டங்கள் அதிகம் களை கட்டும்.
அந்த வகையில் பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று போகி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடும் குளிரில், அதிகாலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள பழைய பொருட்களை எடுத்து வந்து, வீட்டின் வாசல் முன்பு தீயிட்டு எரித்தார்கள். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப போகிப் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேலும் போகிப்பண்டிகையினையொட்டி சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் உள்ளிட்டவைகளை எரிக்காமல் கிராமப்புற மக்கள் போகி பண்டிகையை கொண்டாடியது, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளதை காட்டுகின்றது.
நாராயணசாமி மீது சிபிஐ யில் புகார் கொடுங்க.. விடாதீங்க.. புகாருடன் வந்த தனவேலு.. கிரண் பேடி ஹேப்பி!