புதுச்சேரியில் பா.ஜ.க.வுக்கு முதல் ராஜ்யசபா எம்.பி.. செல்வகணபதி போட்டியின்றி தேர்வு!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் பா.ஜ.க வேட்பாளா் செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் நடத்தும் அதிகாரி முனுசாமியுடம் இருந்து அவர் சான்றிதழை பெற்றுக்கொண்டர். செல்வகணபதி தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையத்துக்கு 4 மாதம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்!
புதுச்சேரியில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு அக்டோபர் 4-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது.
செல்வகணபதி தேர்வு
சுயேச்சைகள் 5 பேரும், பாஜக வேட்பாளா் ஒருவரும் என 6 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். எம்.எல்.ஏ.க்கள் யாரும் முன் மொழியாததால், சுயேச்சைகள் 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பா.ஜ.க வேட்பாளா் செல்வகணபதியின் வேட்புமனு மட்டும் ஏற்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் நடத்தும் அதிகாரி முனுசாமி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தார்.
முதல் முறையாக..
இதனை தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி முனுசாமியிடம் செல்வகண்பதி பெற்றார். இதன்மூலம் புதுச்சேரியில் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பா.ஜ.க.வைச் சோ்ந்தவா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தூக்கி நிறுத்துவேன்
இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய செல்வகணபதி கூறுகையில், 'எம்..பி.யாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக இருந்து புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு பாடுபடுவேன். மாநிலத்தை தூக்கி நிறுத்துவேன்' என்று கூறினார். இந்த நிலையில் செல்வகணபதி தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜே.பி.நட்டா வாழ்த்து
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ' வரலாறு - புதுச்சேரியிலிருந்து பாஜகவின் முதல் ராஜ்யசபா எம்.பி. புதுச்சேரியிலிருந்து ஒருமனதாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.செல்வகணபதி ஜியை நான் வாழ்த்துகிறேன். இதேபோல் அசாமில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பானந்த் சோனாவால், மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோருக்கும் வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் செல்வகணபதிக்கு என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.