"3 பேரை" வைத்து சுற்றி வளைக்கும் புதுவை பாஜக.. வெங்கடேசனும், ராமலிங்கமும் யார் தெரியுமா?
புதுச்சேரி எம்எல்ஏ வெங்கடேசன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
புதுச்சேரி: புதுச்சேரி மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். தமிழிசை ஆளுநராக இருக்கும் போதாவது பாஜக நியாயமாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு அவரது ஆட்சிக்காலத்திலும் அதே மாதிரியான பாலிட்டிக்ஸை பாஜக கையில் எடுத்திருப்பது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
கிரண் பேடி காலத்தில்தான் பாஜகவால் புதுச்சேரி அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இப்போது தமிழிசை காலத்திலும் அதேபோலதான் நடக்குமோ என்ற அயர்ச்சியும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எல்லாத்துக்கும் காரணம் இந்த 3 நியமன எம்எல்ஏக்கள்தான்.
சட்ட மேல்சபை வருமா? உயிரை கொடுத்து உழைக்கும் திமுக சீனியர்களுக்கும் வாய்ப்பு கிடைக்குமா?
கடந்த முறை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி, அப்போதைய முதல்வர் நாராயணசாமியின் கடும் எதிர்ப்பையும் மீறி 3 பாஜகவினரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்தார். அவர்களுக்கு வாக்குரிமை உண்டு என்பதால் அதை வைத்துத்தான் நாராயணசாமி அரசை கவிழ்த்தனர்.
கிரண்பேடி
பாஜகவால் மட்டுமே ஆட்சி கவிழ்ந்தது என்ற பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக திமுகவிலிருந்து ஒருவர் உள்பட பலரையும் மடக்கி தங்கள் பக்கம் கொண்டு வந்து ஆட்சியைக் கவிழ்த்தனர். கிரண் பேடியை அனுப்பி விட்டு, தமிழிசையை ஆளுநராக்கி எல்லாமே நடந்து முடிந்தது.
அதிர்ச்சி
இப்போது அதே போல மீண்டும் 3 பேரை, அதுவும் பாஜகவினரை நியமன எம்எல்ஏக்களாக்கியுள்ளனர். இதுதான் சலசலப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த 3 பேரில் 2 பேர் யார் என்று பார்த்தால் அவர்கள் பரம்பரை பாஜகவினரே கிடையாது. ஒருவர் முன்னாள் திமுக காரர்... இன்னொருவர் முன்னாள் காங்கிரஸ்காரர். மிச்சமிருக்கும் ஒருவர் மட்டுமே பாஜகவைச் சேர்ந்தவர்.
வெங்கடேசன்
முதல் நபர் வெங்கடேசன்... இவர் பக்கா திமுக காரர். 2019ம் ஆண்டு தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தது. அப்போது திமுக சார்பாக களம் இறக்கப்பட்டு வெறும் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர். நாராயணசாமிக்கு பாஜக ஸ்கெட்ச் போட்டு வளைத்தபோது இவரையும் சேர்த்து வளைத்தது. நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி தரும் வகையில் இவர் கடைசி நேரத்தில் ராஜினாமா செய்து விட்டு பாஜக பக்கம் போய் விட்டார்.
என்ன
இப்படித் தாவி வந்தவருக்கு நடந்து முடிந்த தேர்தலில் சீட் தரவில்லை. மாறாக தற்போது நியமன உறுப்பினராக்கி அழகு பார்த்துள்ளது பாஜக. இவரை வைத்துத்தான் இப்போது மீண்டும் கேம் ஆட பாஜக திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். இவர் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியிலிருந்து ஆட்களை இழுக்க முயற்சிக்கலாம் என்றும் சந்தேகப்படுகிறார்கள்.
ராமலிங்கம்
இன்னொருவர் ராமலிங்கம். இவர் யார் என்றால் முன்னாள் சபாநாயகரான காங்கிரஸ் கட்சியின் சிவக்கொழுந்துவின் உடன் பிறந்த தம்பி ஆவார். சிவக்கொழுந்துவும் திடீரென தனது பதவியை உடம்பு சரியில்லை என்று கூறி ராஜினாமா செய்தார். அதற்கு முன்பாகவே அவரது தம்பி ராமலிங்கம் கட்சி தாவி விட்டார். அதாவது பாஜகவில் சேர்ந்து விட்டார். இப்போது அவருக்கும் எம்எல்ஏ பதவியை தூக்கிக் கொடுத்துள்ளனர்.
எதிர்பார்ப்பு
இப்படி பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு நியமன உறுப்பினர் பதவி கொடுத்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இவர்களை வைத்து என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு குடைச்சல் கொடுக்க பாஜக திட்டமிட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அப்படி குழப்பம் ஏற்பட்டால் அதை தமிழிசை வேடிக்கை பார்ப்பாரா அல்லது தார்மீக ரீதியில் தட்டிக் கேட்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.