புதுச்சேரி ராஜ்யசபா சீட்:பாஜகவுக்கு விட்டு கொடுத்தார் முதல்வர் ரங்கசாமி- என்.ஆர் காங்.-ல் அதிர்ச்சி
புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு ராஜ்யசபா சீட்டை மல்லுக்கட்டி வாங்கிவிட்டது பாஜக. புதுச்சேரி ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளராக முன்னாள் நியமன எம்.எல்.ஏ. செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். இது முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வென்றது. புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்று பல நாட்கள் உருண்டோடிய பின்னர்தான் அமைச்சரவை பதவியேற்றது.
புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் பதவியை பாஜக கேட்டு அடம்பிடித்தது. அதேபோல் அமைச்சர்களின் இலாகா விவகாரங்களிலும் ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுத்தது பாஜக.
ஊர்க்காவல் படையினருக்கான ஊதியம்.. அரசு மீது நம்பிக்கை.. பாஜக அண்ணாமலையின் வழக்கு முடித்து வைப்பு
ராஜ்யசபா தேர்தல்
6 எம்.எல்.ஏக்களைக் கொண்ட பா.ஜ.க. இடைவிடாமல் ஒவ்வொரு விவகாரத்திலும் ரங்கசாமிக்கு நெருக்கடி கொடுத்து சாதித்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில்தான் அதிமுக ராஜ்யசபா எம்.பி. கோகுலகிருஷ்ணனின் பதவிக் காலம் முடிவடைவதால் ஏற்படும் காலி இடத்துக்கு அக்டோபர் 4-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பாஜக பிடிவாதம்
இதையடுத்து அந்த ஒரு ராஜ்யசபா சீட்டையும் எங்களுக்கே தர வேண்டும் என தீர்மானம் போட்டது பாஜக. அத்துடன் ரங்கசாமி வீட்டுக்குப் போய் நெருக்கடி கொடுத்தனர். ஆனால் ரங்கசாமி விட்டுக் கொடுக்கவில்லை. இதையடுத்து பாஜக நிர்வாகிகள் டெல்லிக்கு படையெடுத்தனர்.
அதிமுகவும் கோரிக்கை
அதேநேரத்தில் அதிமுக எம்.பி.யின் இடம் காலியாவதால் கூட்டணியில் உள்ள அதிமுகவுக்குதானே அந்த சீட்டை தர வேண்டும் என அந்த கட்சியும் முட்டி மோதியது. இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமிக்கு புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் நீண்ட கடிதமும் அனுப்பினார். சட்டசபை தேர்தலிலும் குறைவான இடம்தான் தரப்பட்டது; நியமன எம்.எல்.ஏக்கள் 3 பதவியையும் பாஜகவே எடுத்துக் கொண்டது.. இப்போதாவது ராஜ்யசபா எம்.பி.சீட்டை கொடுக்க வேண்டும் என எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தது அதிமுக.
தமிழிசையுடன் சந்திப்பு
இந்த பஞ்சாயத்துகளுக்கு மத்தியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேற்று முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசினார். ராஜ்யசபா சீட் விவகாரம் குறித்து இருவரும் பேசியிருக்க வாய்ப்புள்ளது என்றனர் அரசியல் வட்டாரங்கள். ஆனால் அரசு நிர்வாக ரீதியாக பேசப்பட்டதாக ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பு தெரிவித்தது.
பாஜகவுக்கே சீட்
இந்நிலையில்தான் புதுச்சேரி ராஜ்யசபா சீட்டை பாஜகவுக்கு கொடுக்க முதல்வர் ரங்கசாமி ஒப்புக் கொண்டுவிட்டார். நாளை வேட்புமனுத் தாக்கல் முடிவடைவதால் முன்னாள் நியமன எம்.எல்.ஏ.செல்வகணபதியை டெல்லி பாஜக மேலிடம் வேட்பாளராகவும் அறிவித்துவிட்டது. ஏற்கனவே சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், புதுச்சேரியில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகின. இப்படி பாஜகவின் அத்தனை அழுத்தங்களுக்கும் முதல்வர் ரங்கசாமி பணிந்து போவது அவரது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது என்கின்றன புதுவை தகவல்கள்.