சிறைக்குள் உட்கார்ந்து கொண்டு.. ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிர வைத்த கைதி!
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் இருந்துகொண்டே தண்டனை கைதி ஒருவர் செல்போன் மூலம் புதுச்சேரி ஆளுநர் மாளிகை மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நேற்று பிற்பகல் புதுச்சேரி காவல் கட்டுபாட்டு அறைக்கு செல்போன் மூலம் பேசிய மர்ம நபர் ஆளுநர் மாளிகை, புதுச்சேரி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என பேசிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் மூலம் ஆளுநர் மாளிகை வளாகம் மற்றும் புதுச்சேரி ரயில் நிலையம் மற்றும் ரயில்களிலும் சோதனை செய்தனர். சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்பட்டவில்லை. இதனையடுத்து போனில் வந்த மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காவல் கட்டுபாடு அறைக்கு வந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அது புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காலாப்பட்டு மத்திய சிறைக்குள் சென்று விசாரித்தபோது, கடந்த டிசம்பர் மாதம் கார் திருட்டு வழக்கில் ஒன்றில் கைதாகி சிறையில் இருக்கும் டெல்லியை சேர்ந்த 33 வயதான வாலிபர் நித்திஸ்சர்மா செல்போன் மூலம் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
மேலும் இதேபோல் சிறையில் இருந்த கைதி நிதிஸ்சர்மா சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு நேற்று மாலை போன் செய்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதும் தெரியவந்தது.
சிறையில் இருந்து கொண்டே ஆளுநர் மாளிகை உள்ளிட்ட இடங்களுக்கு சிறைக்கைதி ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சிறையில் உள்ள அனைத்து அறைகளையும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது மேலும் சில செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகின்றது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காலாப்பட்டு போலீசார் சிறையில் இருந்த கைதிக்கு எப்படி செல்போன் கிடைத்தது, மிரட்டல் விடுப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியரசு தினவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாகவும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், குடியரசு தினம் நெருங்கும் வேலையில் சிறையில் இருக்கும் கைதி ஒருவர் ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.