புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. குடியரசுத் தினத்தை சீர்குலைக்க சதியா?
புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்திற்கு மர்ம நபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மணி நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.
புதுச்சேரி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து துணைநிலை ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் என மிரட்டல் விடுத்துவிட்டு, தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் 4 பேர் கொண்ட குழுவினர், துணைநிலை ஆளுநர் மாளிகை மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை உறுதிப்படுத்தியதை தொடர்ந்து, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதேபோன்று ரயில் நிலையத்திலும் இரண்டு பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டதில் அங்கும் வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வரும் 26 ஆம் தேதி புதுச்சேரியில் குடியரசுத் தினம் கோலாகலமாக கொண்டாட்டப்பட உள்ள நிலையில், ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.