பிரெய்லி வாக்காளர் அடையாள அட்டை.. அசத்திய புதுச்சேரி தேர்தல் ஆணையம்
புதுச்சேரி: பார்வையற்றோருக்கு, பிரெய்லி அடையாளம் கொண்ட வாக்காளர் அடையாள அட்டைகளை புதுச்சேரி தேர்தல் அதிகாரிகள் இன்று வழங்கி உள்ளார்கள்.
இந்திய தேர்தல் ஆணையமானது அனைவரும் அணுகும் வகையில் வரும் மக்களவை தேர்தல் அமைய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, பார்வையற்றோருக்கு, சில விதிகளோடு பிரெய்லி அடையாளம் கொண்ட வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக தருமாறு வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமுள்ள 1,036 பார்வையற்ற வாக்காளர்களுக்கு பிரெய்லி அடையாளம் கொண்ட வாக்காளர் அடையாள அட்டையினை புதுச்சேரி தேர்தல் துறை தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.
பார்வையற்றோருக்கான வாக்காளர் அடையாள அட்டையில் பிரெய்லி புள்ளிகள் ஒளிபுகும் ஸ்டிக்கர்கள் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. முன்பகுதியில் வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளர் பெயர், பிறந்ததேதி, வயது ஆகிய விவரங்கள் இருக்கிறது.
பின்பகுதியில் வாக்குச்சாவடி எண், தொகுதி பெயர், எண் ஆகிய தகவல்கள் உள்ளன. இந்த பிரெய்லி வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் பார்வையற்ற 46 வாக்காளர்களுக்கு வழங்கினார். இந்த முறை தற்போது இந்த தேர்தலில் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.