மோர் குடிங்க.. கூலா ஓட்டுப் போடுங்க.. அசத்திய புதுச்சேரி தேர்தல் ஏற்பாடுகள்!
புதுச்சேரி: கடும் வெயில் எதிரொலியாக, புதுச்சேரியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் வெங்கட்டா நகர் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு வெயில் சூட்டை தணிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் மோர் வழங்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் 18 ம் தேதி நடைபெற்றது. இதில் காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 10 ஆம் எண் வாக்குச்சாவடியில், விவிபாட் எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவின்போது பதிவான ஒப்புகை சீட்டுகளை அதிகாரிகள் வெளியே எடுக்காமல் வாக்குப்பதிவை நடத்தியதால், அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமென அரசியல் கட்சிகள் தேர்தல் துறையிடம் வலியுறுத்தித்தின் பேரில், இன்று அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதனிடையே வாக்குப்பதிவு மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அருண் வாக்கு செலுத்த வரும் வாக்காளர்களுக்கு வெயிலின் காரணமாக அதன் சூட்டை தணிக்கும் வகையில், அனைவருக்கும் மோர் வழங்க அறிவுரை கூறினார்.
இதனை தொடர்ந்து வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அனைவருக்கும் மோர் வழங்கப்பட்டது. மேலும் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வக்குச்சாவடியை மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு மற்றும் மேலிட பார்வையாளர் மேத்தா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது அதிகப்படியான போலீசார் வாக்குச்சாவடி பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதால் வாக்காளர் எப்படி வாக்களிக்க வருவார்கள் என தேர்தல் மேலிட பார்வையாளர் மேத்தாவிடம் சுயேட்சை வேட்பாளரின் முகவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கொக்குகள், பச்சை கிளிகள் மீட்பு.. வனத்துறை நடவடிக்கை