'அம்மா' மறந்துடாதீங்க.. தவிப்போடு வந்த வேட்பாளர்கள்.. வழியனுப்பிய மக்கள்.. இதுதான் புதுச்சேரி
புதுச்சேரி: மச்சான் மறந்துடாத.. அம்மா பாத்துமா.. அக்கா யோசிங்க.. தம்பி நமக்கு தானே... என மொத்த வேட்பாளர்களும் இன்று கடைசி நாள் பிரச்சாரத்தில் புதுச்சேரி வாக்காளர்களை மொய்த்து முற்றுகையிட்டதால் யாருக்கு ஓட்டு போடுவது என்று புதுச்சேரி வாக்காளர்கள் சற்று குழம்பித்தான் போய் இருப்பார்கள்
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதிக்கான தேர்தல் மற்றும் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இங்கு தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கத்தை ஆதரித்தும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்தும் முதல்வர் நாராயணசாமி பிரச்சாரம் செய்தார்.
இதேபோல் நாராயணசாமியுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் உப்பளம், உருளையன்பேட்டை, முத்தியால்பேட்டை, காலாப்பட்டு உள்ளிட்ட புதுச்சேரி நகர் பகுதிகள் முழுவதும் இருசக்கர வாகனத்தில் சென்றவாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி புதுச்சேரி நகர் முழுவதும் தீவிரமாக இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனால் ஒட்டுமொத்த புதுச்சேரி நகரமே வேட்பாளர்களின் முற்றுகையால் நெரிசலில் திணறியது.