மின்னல் வேகத்தில் கோர விபத்து.. லாரி சக்கரம் ஏறி இறங்கி ஒருவர் பலி.. ஷாக் காட்சிகள்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை பதபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் சாவடி வண்ணான்தெருவை சேர்ந்தவர் முருகன் 48. லாரி ஓட்டுநரான இவர் கடந்த 19 ஆம் தேதி தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தூக்கணாம்பாக்கம் பகுதிக்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது புதுச்சேரி குருவிநத்தம் தூக்குபாலம் அருகே, அவர்கள் மூவரும் வந்துகொண்டிருந்த போது, எதிரில் வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்த முருகனின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், லாரி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முருகன் மற்றும் அவரது நண்பர்கள் மீது மோதுவதும், அந்த பகுதியில் பணியில் இருந்த இரண்டு காவலர்கள் விபத்து நடந்தவுடன் வந்து உதவி செய்வதும், விபத்து நடந்தவுடன் அருகில் இருந்தவர்கள் பயத்துடன் அங்கிருந்து அலறியடித்து ஓடிச்செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.